கர்நாடகாவில் புது திருப்பம்.. 14 முன்னாள் எம்எல்ஏக்களும் கட்சியிலிருந்து நீக்கம்.. காங்கிரஸ் அதிரடி
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரும் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரும் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்த்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார்.
மஜத - காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 17 பேர் ராஜினாமா கடிதம் அளித்ததால் ஆட்சி கவிழ்ந்தது. மொத்தம் காங்கிரஸ் சார்பாக 14 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக இப்படி ராஜினாமா கடிதம் அளித்தனர். இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
கட்சி தாவல் தடை சட்டத்தை மீறியதாக கூறி 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் எல்லோரும் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 14 முன்னாள் எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நீக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரம்:
1) பிரதாப் கவுடா பாட்டீல்
2) பிசி பாட்டீல்
3) சிவராம் ஹெப்பர்
4) எஸ்.டி. சோமசேகர்
5) பைரதி பசவராஜ்
6) ஆனந்த்சிங்
7) ரோசன் பெய்க்
8) கே.சுதாகர்
9) முனிரத்னா
10) எம்டிபி நாகராஜ்
11) ஸ்ரீமந்த் பாட்டீல்
12) ரமேஷ் எல். ஜார்கோலி
13) மகேஷ் கும்தாலி
14) ஆர். சங்கர்
ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தல் வரை இவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது. இடைத்தேர்தல் எதிலும் இவர்கள் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.