மாண்டியா பேருந்து விபத்தை பார்வையிட்ட அம்பரீஷ்.. "இறுதி மூச்சு வரை மக்களுக்காக போராடினாரே"
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் மாரடைப்பால் காலமான அம்பரீஷ் நேற்று மாலை வரை மாண்டியா பேருந்து விபத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய நிதியுதவி வழங்குமாறு கோரினார்.
கன்னட நடிகரும் போராளியுமான அம்பரீஷுக்கு நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் வரை மாண்டியா மாவட்டத்தில் நடந்த கோர விபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
[கர்நாடகாவில் பேருந்து விபத்து... 9 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியான பரிதாபம்! ]
30 பேர் பலி
கர்நாடக மாநிலம் பாண்டவ்பூர் என்ற இடத்திலிருந்து மாண்டியாவுக்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கனகனமாரள்ளி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 30 பேர் பலியாகிவிட்டனர்.
முடுக்கிவிட்ட அம்பரீஷ்
இந்த தகவலை அறிந்த அம்பரீஷ் நேராக சம்பவ இடத்துக்கு வந்து விபத்தை பார்வையிட்டார். அந்த பேருந்தை மீட்பதற்கு தேவையான பணிகளை முடுக்கி விட்டார்.
தொண்டர்களை நிலைகுலைய வைத்தது
பல்வேறு டிவி சேனல்களுக்கு விபத்து குறித்து பேட்டியும் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டார். களத்தில் இருந்து கொண்டு இத்தகைய பணிகளை அவர் ஆற்றிய நிலையில் இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அவரது ரசிகர்களையும் தொண்டர்களையும் நிலைக்குலைய செய்துவிட்டது.
வேதனை
மருத்துவமனை வாயிலில் நின்று அழும் தொண்டர்கள், கடைசி நேரத்தில் கூட குடும்பத்தினருடன் செலவிடாமல் மக்கள் நல பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரே என வேதனை தெரிவித்தனர்.