கொரோனா மரணம்.. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் - போலீஸ் வந்ததும் அந்தர் 'பல்டி'
பெங்களூரு: கொரோனா காலத்தில் கூட இந்தளவுக்கு மனசாட்சி இல்லாமல் ஒருவர் இருப்பாரா என்று இந்த செய்தியை படித்தால் எண்ணத் தோன்றுகிறது.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் வீரியமாக வீசிக் கொண்டிருக்கிறது. ஆண்டி முதல் அரசியல்வாதி வரை பாரபட்சம் பார்க்காமல் படுத்தி எடுத்து வருகிறது.
குறிப்பாக, நாடு முழுவதும் பரவலாக ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கும் அவலங்கள் அரங்கேறி வருவது கொடுமையின் உச்சம்.
கொரோனாவிலிருந்து தப்பிக்க இது தான் ஒரே வழி... கொங்கு ஈஸ்வரன் அரசுக்கு கூறும் முக்கிய யோசனை..!
3 மணி நேரம் தேடிய அவலம்
இந்த நிலையில், பெங்களூருவின் மதிகேரே எனும் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆர்வி பிரசாத் என்பவருக்கு சமீபத்தில் உடல்நலம் முடியாமல் போக, கடந்த ஞாயிறு அன்று கொரோனா டெஸ்ட் கொடுத்திருந்திருக்கிறார். அதில் அவருக்கு கொரோனா உறுதியாக, மருத்துவமனையில் படுக்கைக்கு இடம் தேடி தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் கிட்டத்தட்ட 3 மணி அலைந்திருக்கின்றனர். இந்த அலைச்சலிலேயே சுயநினைவிழந்த பிரசாத் இறந்தேவிட்டார்.
அதிர்ச்சி கொடுத்த டிரைவர்
இதனால் பெரும் மன வேதனை அடைந்த குடும்பத்தினர், பிறகு ஒருவழியாக தங்களை தேற்றிக் கொண்டு, புதன்கிழமை அன்று இறுதிக் காரியங்களை செய்யலாம் என்று முடிவெடுத்தனர். இதையடுத்து, ஆம்புலன்சில் உள்ள freezer-ல் உடலை வைத்திருக்கக் கோரி அதன் டிரைவர் ஹனுமந்தா என்பவரிடம் குடும்பத்தினர் கேட்க, அதற்கு அவர் ரூ.60,000 கேட்டிருக்கிறார். அதிர்ச்சியடையந்த குடும்பத்தினர், விலையை குறைக்கச் சொல்லி கேட்ட போது, உடலை எடுத்துக் கொள்ளுமாறு அவர் கூறியிருக்கிறார். பிறகு வேறுவழியின்றி, ரூ.3,000 அட்வான்ஸ் செலுத்தி உடலை freezer-ல் வைத்திருந்திருக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் இனி வராது
மறுநாள், பிரசாத்தின் மகள் பவ்யா ரூ.10,000 தொகையை ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கொடுத்து, மேற்கொண்டு பணம் புரட்ட முடியவில்லை என்று சொல்ல, ஆம்புலன்ஸ் டிரைவர் இதற்கு மேல் வண்டி ஓடாது என்று தெரிவித்திருக்கிறார். சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், இவ்விவகாரத்தில் தலையிட, பல்டி அடித்த டிரைவர், 'நான் ரூ.6,000 தான் கேட்டேன். அது அவர்கள் காதில் 60,000 என்று விழுந்திருக்கிறது' என்று கூறியிருக்கிறார். (ஓஹோன்னானான்...) ஆனால், பிரசாத்தின் குடும்பம் அந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மொத்தமாக ரூ.13,000 கொடுத்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்து இருக்கிறது.
அள்ளும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
கோவிட் அவசர காலத்தை பயன்படுத்தி, அம்புலன்ஸ் டிரைவர்கள் பலர் இப்படி ஆயிரக்கணக்கில் பணம் கறப்பது குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட, என்ஜிஓ-வில் பணியாற்றும் ஒருவருக்கு தெரிந்த நபர் ஒருவர் இறந்து போக, மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் உடலை எடுத்து வந்து, ஒரு இரவு Freezer-ல் வைத்திருக்க ரூ.35,000 பணம் பெற்றது குறிப்பிடத்தக்கது.