அமுல்யாவுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு.. ஜாமீன் கிடைக்காது.. அப்பாவும் கைவிட்டுவிட்டார்- எடியூரப்பா
பெங்களூர்: "பாகிஸ்தான் வாழ்க" என்று பெங்களூரு நிகழ்ச்சியில் கோஷமிட்ட பெண் நக்சலைட் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பெங்களூரில் நேற்று மாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த கூட்டத்தில் இடதுசாரி ஆதரவாளரான அமுல்யா லியோனா, என்ற இளம்பெண்ணும் பங்கேற்றார்.
மேடையில் தோன்றி, அவர் திடீரென, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற கோஷத்தை எழுப்பினார். பாகிஸ்தான் வாழ்க என்று இதற்கு அர்த்தம். இதை கேட்ட ஓவைசி விரைந்து வந்து அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் மேடையில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
இதனிடையே தேச விரோத சட்டத்தின்கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமுல்யா. இது ஒரு பக்கம் என்றால் சிக்மகளூரில் உள்ள அமுல்யா வீட்டை சில வலதுசாரிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா அமுல்யாவுக்கு, ஜாமீன் கிடைக்க போவது கிடையாது. அந்தப் பெண்ணுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். நாட்டுக்கு எதிரான செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அமுல்யா தனக்கு மகளே இல்லை என்றும் அவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யப் போவதில்லை என்றும் அவரது தந்தையே தெரிவித்துவிட்டார். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
அமுல்யா தந்தை, உள்ளூர்மட்டத்தில், மதசார்பற்ற ஜனதாதள கட்சி பிரமுகராக உள்ளார். அவர் அளித்த பேட்டியில், எனது சொல்பேச்சை கேட்காமல் அவர் இப்படி புரட்சி பேசியபடி உள்ளார். அவர் பேசியது தவறானது என்றார்.