அரசு அதிகாரியின் தோழியின் வீட்டில் ரூ. 250 கோடிக்கு சொத்து ஆவணங்கள்.. கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூரு: கர்நாடக அரசில் உயிரியல் தொழில்நுட்ப துறையில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்க்கும் சுதா என்ற பெண் அதிகாரியின் தோழியான ரேணுகாவின் வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் நடத்திய சோதனையில் ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள், 3½ கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுதாவின் சொத்துக்களுக்கு ரேணுகா பினாமியாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களூருவில் கர்நாடக அரசின் உயிரியல் தொழில்நுட்ப துறையில் நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வருபவர் சுதா. பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாகப் பணியாற்றி இருக்கிறார்.
அப்போது விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு, அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை அவர்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்ததாக ஊழல் புகார்கள் எழுந்தது.
கர்நாடக இடைத் தேர்தல்கள்: தோற்றால் பாஜகவுக்கு நஷ்டமில்லை.. எடியூரப்பாவுக்குத்தான் பெரிய சிக்கல்
ஊழல் தடுப்புப் படை
இதையடுத்து, ஊழலை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பு சுதா வீட்டில் சோதனை நடத்த ஊழல் தடுப்பு படைக்கு உத்தரவிட்டது. அதன்படி பெங்களூர் கொடிகேஹள்ளியில் உள்ள சுதாவின் வீடு, சாந்திநகரில் உள்ள அலுவலகம் உள்பட 6 இடங்களில் அதிகாரிகள் படை ஒரே நேரத்தில் சோதனை செய்தது
இந்த சோதனையின் போது பல லட்சம் ரூபாய் நகை மற்றும் பணத்தை ஊழல் தடுப்புப் படையினர் கைப்பற்றினார்கள்.
ரேணுகா வீட்டில்
அப்போது நடந்த விசாரணையில் சுதாவின் தோழி ரேணுகா என்பவர் சுதாவுக்கு லஞ்சப் பணத்தை வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்டு போல செயல்பட்டு வந்ததையும் ஊழல் தடுப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
3½ கிலோ தங்கநகைகள்,
இதையடுத்து பெங்களூரு பேடராயனபுராவில் உள்ள ரேணுகா வீட்டில் ஊழல் தடுப்புப் படையினர் சோதனை செய்தார்கள். இந்த சோதனையில், ரேணுகாவின் வீட்டிலிருந்து 3½ கிலோ தங்கநகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.35 லட்சம் ரொக்கம், 40 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 100 காசோலைகள், ரூ.250 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
அதிகாரிகள் அதிர்ச்சி
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இவை அனைத்தும் சுதாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். சுதாவின் தோழி ரேணுகாவின் கணவர் சந்திரசேகர் ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவார். மகன் மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்‘. ரேணுகா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சுதாவின் சொத்துகளுக்கு ரேணுகாதான் பினாமி என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.