ஐஐடி/ஐஐஎம்மில் படித்தால் வீடு வாடகைக்கு! பெங்களூரில் ஓனர்கள் அட்ராசிட்டி! நீயா நானா லிஸ்டில் இல்லீயே
பெங்களூர்: பெங்களூரில் வாடகைக்கு வீடு கேட்க வருவோரிடம் உரிமையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் ஐஐடி அல்லது ஐஐஎம்மில் படித்தவர்களா என்பதுதான். ஆம் என்றால் வீடு உண்டு, இல்லை என்றால் வீடு வாடைக்கு கிடைக்காது. இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி இளைஞர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.
தங்க வீடு கிடைக்குமா என கேட்டால் தங்க வீடு இல்லீங்க, செங்கல் வீடுதான் இருக்கு என அந்த காலங்களில் காமெடிக்கு சொல்வதுண்டு. சினிமா நடிகர், நடிகைகள், நாடக நடிகர்கள் உள்ளிட்டோருக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டார்கள்.
வீடு வாடகைக்கு என கேட்டாலே 1008 கண்டிஷன்கள் உண்டு.. வீட்டில் சுவற்றில் ஆணி அடிக்க கூடாது, குடியிருப்போர் சட்டை எங்கே மாட்டுவது என்பது குறித்தெல்லாம் கேள்வி கேட்கவே கூடாது. உங்கள் வீட்டில் எத்தனை பேர்? என்ன சம்பாதிக்கிறீங்க? கணவன்- மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமே வீடு, வயதான அம்மா, அப்பா இருந்தால் அதெல்லாம் இல்லீங்க, 4 பேருக்கு மட்டும்தான் வீடு என்பார்கள்.
முறைவாசல்
தண்ணீக்கு இவ்ளோ, முறைவாசலுக்கு இவ்ளோ, கரண்ட் பில் யூனிட்டுக்கு இவ்ளோ (அதாவது உரிமையாளரின் கரெண்ட் பில்லுக்கும் வாடகைதாரரே பில் கட்டும் அளவுக்கு கரென்டுக்கு வசூல்). இரவு 10 மணிக்கு மேல் விளக்கு எரிய கூடாது. சொந்தக்காரர்கள் வந்தால் இரண்டு, மூன்று நாள்களில் சென்றுவிட வேண்டும். இன்று 4 பேர் என சொல்லிவிட்டு இன்னும் 6 மாதம் கழித்து சொந்தக்காரர் பையன், பொண்ணு காலேஜ் படிக்கிறாங்க, வேலை பார்க்கிறாங்கனு சொல்லி இதே வீட்டில் தங்கக் கூடாது.
வெஜிட்டேரியன்
கறி சாப்பிடுவோர் என்றால் சிலர் வீடு கொடுக்க மாட்டார்கள். சில மதம் குறித்த கேள்வியை எழுப்புவார்கள். ஆண்டுதோறும் வாடகை கண்ணாபிண்ணா என ஏற்றுவார்கள், அதை கேட்டால் காலி செய் என்பார்கள். இப்படியாக சென்னை உள்ளிட்ட மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் வீட்டை வாடகைக்கு பிடித்து குடியேறுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். இந்த காலங்களில் எங்கோ சில இடங்களில் உரிமையாளர்கள் நல்லவிதமாக நடந்து கொள்கிறார்கள்.
ஐடி பார்க்
ஆனால் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூரில் வீடு வாடகைக்கு கேட்டால் மேற்கண்ட ஒரு கேள்வியை கூட ஓனர் கேட்கவில்லை (பொறுங்க! நல்ல விஷயம்தானேனு பாராட்டிடாதீங்க). அதற்கு மாறாக நீங்கள் ஐஐடி அல்லது ஐஐஎம் ஆகிய இடங்களில் படித்திருந்தால் மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படுகிறதாம். அட்லாசியான் எனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பிரியான்ஷ் ஜெயின் என்பவர் பெங்களூரில் இந்திரா நகர், டோம்லூர், HAL பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடி வந்திருக்கிறார்.
ஐஐடியில் படித்தவரா
இதற்காக முகவர் ஒருவரை அணுகியிருக்கிறார். அவருடனான சாட்டிங்கில் நான் அட்லாசியன் எனும் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன், சைவ உணவை மட்டுமே உட்கொள்வேன் என பிரியான்ஷ் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த முகவரோ எந்த கல்லூரியில் படித்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பிரியான்ஷ் வேலூரில் உள்ள விஐடி எனும் பல்கலைக்கழகத்தில் படித்ததாக குறிப்பிடுகிறார். அதற்கு அந்த முகவர் உங்கள் ப்ரொஃபைல் எங்கள் கோரிக்கைகளுடன் பொருந்தவில்லை, மன்னிக்கவும் என மெசேஜ் அனுப்புகிறார். இதை பார்த்த பிரியான்ஷ் ஜெயினுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
கேர்ள் பிரண்டு இருக்கா
இதுகுறித்து பிரியான்ஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் சந்தித்தது போல் பல்வேறு அனுபவங்களை பலர் பகிர்ந்துள்ளார்கள். அதில் ஒருவர் இருவருக்கு வீடு தேடியுள்ளார். அதாவது திருமணமாகாதவர்கள். இருவர் செய்யும் இடத்தை முகவருக்கு அனுப்பியுள்ளார். அவர் வயது என்ன என கேட்கிறார். அதற்கு 23 மற்றும் 24 என அனுப்புகிறார். உடனே முகவர் உங்கள் சேலரி ஸ்லிப்பை அனுப்புங்கள் என்கிறார். அதற்கு வாடகைக்கு வீடு தேடும் நபர் அதை ஏன் கேட்கிறீர்கள் என கேட்கிறார். உடனே முகவரோ உங்களுக்கு பெண் தோழிகள் இருக்கிறார்களா என கேட்கிறார், அதற்கு அந்த நபர், அதுகுறித்து உங்களுக்கு ஏன் கவலை என கேட்கிறார். உடனே அந்த முகவர்- சாரி பேச்சுலர்களுக்கு இரு பெட்ரூம் கொண்ட பிளாட்டை வாடகைக்கு விடவில்லை என கூறி மறுத்துவிடுகிறார்.
லிங்க்டு இன்
ஒரு முகவரிடம் வீடு வாடகைக்கு அணுகும் போது சனிக்கிழமையில் வீட்டை பார்க்கலாம் என முடிவு செய்துள்ளோம் என வாடகைக்கு வீடு கேட்போர் மெசேஜ் செய்ய அதற்கு அந்த முகவர் வீடு பார்க்க வருவதற்குள் உங்களுடைய Linked in ஐடியை கொடுங்கள், ஓனருக்கு அனுப்ப வேண்டும் என கேட்கிறார். அதாவது தாங்கள் இந்த இடத்தில் வேலை செய்கிறோம் என சொன்னால் கூட அதை நம்பாமல் கிராஸ் செக் செய்யும் அளவுக்க உரிமையாளர்கள் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
நீயா நானாவே தேவலாம் போலயே!
அண்மையில் விஜய் டிவியில் நீயா நானாவில் வீட்டு உரிமையாளர்கள் வெர்சஸ் குடியிருப்போர் குறித்த விவாதம் நடைபெற்றது. அதில் சுவற்றில் ஆணி அடிக்க கூடாது, மாதம் 1ஆம் தேதியானால் வாடகை வந்துவிட வேண்டும், கை குழந்தைகள் இருந்தால் வீடு கொடுக்க மாட்டோம், வீட்டை அவ்வப்போது வந்து சுத்தமாக வைத்திருக்கிறீர்களா என பார்ப்பதற்கு குடியிருப்போர் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது... இப்படியாக கோபிநாத்தே அதிர்ச்சியாகும் கண்டிஷன்களை போட்டனர். ஆனால் பெங்களூருவில் வீட்டு உரிமையாளர் போடும் கண்டிஷன் நீயா நானாவில் கூட இல்லையே!