அன்றே எச்சரித்தார்.. 1 நாள் தாக்குபிடித்திருந்தால் கதையே வேறு.. குமாரசாமிக்கு ஜோசியர் தந்த வார்னிங்
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அவரின் ஜோசியர் எச்சரித்தது போலவே கவிழ்ந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.
இதனால் பெரும்பான்மை இல்லாமல் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழ்ந்துள்ளது.
என்ன நம்பிக்கை
பொதுவாக கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் ஜோசியம், ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அதிலும் குமாரசாமியும், அவரது சகோதரர் ரேவண்ணாவும் அதிக கடவுள் பக்தி கொண்டவர்கள். முக்கியமாக ரேவண்ணா மாந்திரீகம், மந்திரம், பில்லி சூனியம் இதில் எல்லாம் கூட நம்பிக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசகர் யார்
இவர்கள் இருவருக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை சொல்ல குடும்ப ஜோதிடர் ஒருவரும் இருக்கிறார். இவர்தான் கடந்த வருடம் குமாரசாமி முதல்வர் ஆவார் என்று கூறியதாக செய்திகள் வந்தது. முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும் முன் குமாரசாமி இந்த ஜோதிடரிடம் பேசிவிட்டுத்தான் முடிவுகளை எடுப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்ன சொன்னார்
இவர் சென்ற வாரம் குமாரசாமிக்கு முக்கியமான ஆலோசனை ஒன்றை வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளது. அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பு கண்டிப்பாக நடக்கும். ஆனால் இப்போதே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஆட்சி கவிழும். இந்த வாரம் புதன் கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி போட்டால் ஆட்சியை தக்க வைக்கலாம். அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க கூடாது என்று குமாரசாமிக்கு ஜோதிடர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
அப்படியே செய்தார்
இதனால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி எல்லாம் தள்ளிப்போடலாம் என்று தொடர்ந்து குமாரசாமி முயன்று வந்தார். பல்வேறு விஷயங்களை செய்து , சட்டசபையில் ஒரு வாரம் தேவை இல்லாமல் நேரம் தாழ்த்தி வாக்கெடுப்பை எப்படி எல்லாம் தள்ளிப்போடலாம் என்று தொடர்ந்து முயன்று வந்தார். நேற்று வரை இதை அவர் சிறப்பாக செய்து வந்தார்.
ஆனால் என்ன
ஆனால் நேற்று அவரால் மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட முடியவில்லை. இதனால் நேற்று வேறு வழியே இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஜோசியர் சொன்னது போலவே குமாரசாமி தோல்வி அடைந்தார். தற்போது ஆட்சியும் கவிழ்ந்துள்ளது.
என்ன ஒருவேளை
ஒருவேளை ஜோசியர் சொன்னது போல குமாரசாமி இன்று வரை நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட்டு, ஏதாவது செய்து இருந்தால் அதிசயங்கள் நிகழ்ந்து, போன எம்எல்ஏக்கள் திரும்பி வந்து, அவரின் ஆட்சி காப்பாற்றப்பட்டு கூட இருக்கும். அப்படி எல்லாம் எதுவும் நடக்காமல் போய்விட்டது. ஆனால் என்னவோ கடைசியில் ஜோசியர் எச்சரித்தது போலவே அவரின் ஆட்சியும் கவிழ்ந்துவிட்டது.