எடியூரப்பா பேர ஆடியோ... சிறப்பு விசாரணை குழுவை அமையுங்க.. குமாரசாமிக்கு சபாநாயகர் ஆலோசனை
Recommended Video
பெங்களூரு:எடியூரப்பாவின் தொலைபேசி உரையாடல் குறித்து சிறப்பு விசாரணை குழுவை அமைக்கலாம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி, பாஜக மாநில தலைவர் எடியூரப்பா மஜத எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் பேசியதாகக் கூறி அது தொடர்பான 2 ஆடியோ பதிவுகளை வெளியிட்டார். பாஜக மாநில தலைவர்கள், தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டால் ரூ.50 கோடி கொடுப்பதாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் பேரம் பேசியுள்ளனர்.
இது தொடர்பான ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என குமாரசாமி தெரிவித்தார். ஆனால் குமாரசாமியின் ஆதாரங்கள் பொய் என்றும் அவை அனைத்தும் திரிக்கப்பட்டவை என்றும் எடியூரப்பா கூறி வந்தார்.
அந்த நிலைப் பாட்டில் இருந்து மாறிய எடியூரப்பா ஒரு கட்டத்தில் தாம் பேசியதை ஒப்புக் கொண்டார்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமார், குமாரசாமி அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:இது எனது உத்தரவல்ல. ஒரு ஆலோசனையேயாகும். ஆடியோ டேப்பில் உள்ளது என்ன? உண்மையாக அதில் பேசியவர்கள் யார் என்பதை அறிய வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாஜகவின் ஜெகதீஷ் ஷெட்டர், கோவிந்த் கர்ஜோல், மதுசாமி ஆகியோர் சபா நாயகரின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்பதை எதிர்க்கிறோம். நம்பிக்கையில்லாத இந்த அரசாங்கம் தலைமையில் அமைக்கப்படும் சிறப்பு விசாரணையில் உண்மை வெளிவராது என்று கூறினர்.