மோடி அலையை வைத்து மட்டும் சட்டப்பேரவை தேர்தலில் வெல்ல முடியாது...எடியூரப்பா பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் பாஜக வெல்ல பிரதமர் மோடியின் அலை மட்டுமே உதவாது என முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஜில்லா, தாலுக்கா அளவிலான தேர்தல்கள், மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், ஹனாகல் மற்றும் சிண்டாகி சட்டசபை இடைத்தேர்தல்கள் உள்ளிட்டவற்றை அந்த மாநிலம் இந்த ஆண்டு சந்திக்கவுள்ளது. இதற்காக பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
மேலும் வரும் 2023 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், மேலவைத் தேர்தல்களில் வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் பாஜக இறங்கியுள்ளது.
முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்த அமைச்சருக்கான சலுகைகள்- நிராகரித்தார் எடியூரப்பா
தேவனாகிரி
தேவனாகிரியில் பாஜக அலுவலகத்தில் பாஜக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பாவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் தேர்தலில் வெல்ல ஒரே திட்டத்தின் கீழ் நாம் செயல்பட கூடாது. லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பயன்படுத்தி எளிதாக வென்றுவிட்டோம்.
நரேந்திர மோடி
ஆனால் மாநில தேர்தலில் வெல்ல நரேந்திர மோடியின் பெயர் மட்டும் போதாது. கட்சியினராகிய நாமும் பல முயற்சிகளில் இறங்க வேண்டும். கர்நாடகாவில் பாஜக அரசு செய்த மக்கள் நல பணிகளை அவர்களை சென்றடைய வேண்டும். அப்போதுதான் நமக்கு வெற்றி கிடைக்கும். எதிர்க்கட்சிகளை நாம் அவ்வளவு எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களுக்கென ஒரு கணிப்புகளும் பலமும் இருக்கும்.
பாஜக எம்எல்ஏக்கள்
மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பாஜக எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் பாஜகவிலிருந்து யாரும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் காங்கிரஸிலிருந்து முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
மஜத கட்சி
கர்நாடகாவில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்த நிலையில் அவர்களது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக ஆட்சி அமைந்தது, எடியூரப்பா முதல்வரானார். ஆனால் அவர் முதல்வராக தேர்வு செய்யப்படும் போதே இரு ஆண்டுகளுக்கு மட்டுமே முதல்வர் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வரானார்.
பொம்மை ஆட்சி
முன்னதாக பசவராஜ் பொம்மையின் ஆட்சி குறித்து எடியூரப்பா கூறுகையில் நிர்வாகத்தை சிறப்பாக நடத்துகிறார். இதை நான் மட்டும் சொல்லவில்லை. மக்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். வருங்காலத்திலும் இந்த அரசு நல்லாட்சியை தரும் என்றார். எஸ்டி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களை பாஜகவுக்கு அழைத்து வந்தால் கட்சிமேலும் வலுப்பெற உதவும் என்றும் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.