அங்கே 15தான்.. எங்க பக்கம் 100 எம்எல்ஏ.. எடியூரப்பா சிஎம் பதவி காலி.. கர்நாடக பாஜகவில் வெடித்த கலகம்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அந்த கட்சியின் எம்எல்ஏ ஒருவரே கலகக் குரல் எழுப்பியுள்ளார். முதல்வர் பதவியில் எடியூரப்பாவின் நாட்கள் எண்ணப்படுகின்றன.. வட கர்நாடகாவில் இருந்து ஒருவர் முதல்வராக பதவி ஏற்பார் என்று பாஜகவின், விஜயபுரா தொகுதி எம்எல்ஏவும், பாஜக சீனியர்களில் ஒருவருமான, பசனகவுடா பாட்டில் யத்னால், தடாலடியாக தெரிவித்துள்ளார்.
பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது பசனகவுடா பாட்டில் யத்னால் கூறுகையில் இந்த குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
அவர் என்ன சொன்னார் பாருங்கள்: எடியூரப்பா நீண்டகாலமாக முதல்வராக இருக்க முடியாது. பாஜகவின் தலைமையில் உள்ள பலரும் கூட எடியூரப்பா மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
கதம்..கதம்.. எடியூரப்பா முதல்வர் பதவிக்கு ஆப்பு வைக்கிறது டெல்லி? வைரலாகும் பாஜக எம்.எல்.ஏ பேச்சு
100 vs 15
வட கர்நாடகாவை எடியூரப்பா முற்றிலுமாக புறக்கணிக்கிறார். கர்நாடகாவின் முதல்வராக செயல்படுவதற்கு பதிலாக தனது சொந்த மாவட்டமான ஷிமோகாவுக்கு மட்டுமே எடியூரப்பா முதல்வராக செயல்படுகிறார். வடமாவட்டங்களில் பாஜக பெற்ற வெற்றியின் காரணமாகதான் இப்போது இந்த மாநிலத்தில் பாஜக அரியணையில் இருக்கிறது. சுமார் 100 எம்எல்ஏக்கள் வட கர்நாடக தொகுதிகளிலிருந்துதான் பாஜகவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது. ஆனால் பாஜக ஆதரவு பகுதியை எடியூரப்பா புறக்கணிக்கிறார். தெற்கு கர்நாடகப் பகுதிகளில் இருந்து பாஜகவுக்கு வெறும் 15 எம்எல்ஏக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். வட கர்நாடகாவில் இருந்துதான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூட உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
லிங்காயத்துக்கள் ஓட்டு
எடியூரப்பா போலவே, பசனகவுடா பாட்டில் யத்னால் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது லிங்காயத்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் வட கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களில் வெல்ல முடிந்தது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
பாஜக தலைவர்கள் கண்டிப்பு
பசனகவுடா பாட்டில் யத்னால் பேச்சுக்கு, கர்நாடக பாஜகவில் பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சாரியா, இந்த கருத்தை கண்டித்துள்ளார். பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறுகையில், இதுபோன்ற தேவையற்ற பேச்சுக்களை பேசி பலமுறை சர்ச்சைக்குள்ளானவர், பசனகவுடா பாட்டில் யத்னால். எனவே இதை பெரிது படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
சித்தராமையா கருத்து
அதேநேரம் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான, சித்தராமையா கூறுகையில், பாஜகவில் உள்ள சில தலைவர்கள், எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விடவேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்கள். காங்கிரஸ் இந்த அரசை கலைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காது. ஆனால் பாஜகவில் குழப்பம் ஏற்பட்டு அவர்களாகவே அடித்துக் கொண்டு ஆட்சியை கலைத்து விடுவார்கள். அப்போது தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.
எடியூரப்பா செல்வாக்கு
வயதில் மூத்தவர்களுக்கு முதல்வர் உட்பட எந்த பதவியும் கொடுப்பது இல்லை என்பது போன்ற பல நடைமுறைகள் அமித்ஷா பாஜக தலைவராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. ஆனால் இதில் விதிவிலக்கு எடியூரப்பாதான். நரேந்திர மோடி அலை என்பது தாண்டி, எடியூரப்பாவுக்கு கர்நாடகாவில் இருக்கும் மக்கள் செல்வாக்கு வேறு எந்த ஒரு பாஜக தலைவருக்கும் கிடையாது. எனவே எடியூரப்பாவை பகைத்துக்கொள்ள பாஜக தலைமை யோசிக்கிறது. இருப்பினும் வயது மூப்பு மற்றும் அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்க வேண்டிய தேவை இருப்பது, வட கர்நாடகாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த யாராவது ஒரு தலைவரை முதல்வர் ஆக்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் பாஜகவிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பாஜக எம்எல்ஏ கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அதேநேரம் கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டில், பசனகவுடா பாட்டில் யத்னால் பேச்சை கண்டித்து உள்ளார். எனவே விளக்கம் கேட்டு எம்எல்ஏவுக்கு, நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.