பெங்களூர் விமான கண்காட்சி.. 10 கி.மீ சுற்றளவுக்கு அசைவத்திற்கு தடை, ஏன் தெரியுமா?
பெங்களூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி வரும் 13 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
பெங்களூர்: பெங்களூரில் வரும் பிப்ரவரி மாதம் 13-ந் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை 5 நாட்கள் "ஏரோ இந்தியா" என்ற பெயரில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. இந்த விமான கண்காட்சி நடைபெறுவதை ஒட்டி அப்பகுதிகளில் அசைவ உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் எலகங்கா பகுதியில் விமான படை தளம் உள்ளது. இந்த விமான படை தளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'ஏரோ இந்தியா' என்ற பெயரில் விமான கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
விமான கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொள்ளும். விமான கண்காட்சியை ஒட்டி போர் விமானங்களின் சாகச காட்சிகளும் இடம்பெறும்.
கெத்து காட்டிய இந்தியா! குடியரசு தின அணிவகுப்பில்.. கவனம் ஈர்த்த
விமான கண்காட்சி
கடந்த 1996-ம் ஆண்டு முதல் பெங்களூரில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு(2021) பெங்களூரில் 'ஏரோ இந்தியா' விமான கண்காட்சி நடந்தது. அதன்பிறகு 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டு விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த விமான கண்காட்சி வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
10 கி.மீட்டருக்கு அசைவ உணவு தடை
இந்த விமான கண்காட்சியில் 633 இந்திய நிறுவனங்கள் மற்றும் 98 வெளிநாட்டு நிறுவனங்கள் என மொத்தம் 731 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விமானக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடைபெற உள்ள எலகங்கா விமான தளத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றளவிற்கு இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
இறைச்சி கடைகள், அசைவ உணவகங்கள், ரெஸ்டாரண்ட்கள் அனைத்தும் அசைவ உணவுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டால் இந்திய விமானப்படை விதி 1937 மற்றும் பிபிஎம்பி சட்டம் 2020 கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த தடை?
இறைச்சிக்கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் மீதமாகும் உணவு பொருட்கள் பொது இடங்களில் கொட்டப்படுகின்றன. இவற்றை நாடி பறவைகள் அதிக அளவில் வரும். இதனால், விமான கண்காட்சியின் போது விமானத்துடன் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அசைவ உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூர் மாநகராட்சியின் இந்த உத்தரவு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது.