அதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்
பெங்களூர்: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.
கொரோனா வைரஸ் நாடு முழுக்க தீவிரமாக பரவிய போது அதைக் கட்டுப்படுத்தியதில் பெங்களூர் சாதித்தது. பெருநகரங்களில் பெங்களூரு சிறப்பாக கொரோனாவை கட்டுப்படுத்தியதாக, பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு ஊடகங்களும் பாராட்டின.
கொரோனா வைரஸ் பரவலை பொறுத்த அளவில் எந்த ஒரு தடுப்பு மருந்தும், இல்லாத சூழ்நிலையில், அதன் பரவல் ஒரு உச்சத்திற்கு சென்ற பிறகுதான் குறையத் தொடங்குகிறது. இது உலகம் முழுக்க உள்ள நிலவரம். பெங்களூரிலும் இப்போது பரவல் அதிகரித்துக் கொண்டுள்ளது. நேற்றைய தினம் ஒரே நாளில் 2233 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பெங்களூரில் பதிவாகியுள்ளன.
குறையும் ஆக்சிஜன்.. அதிகாலையில் நிகழும் கொரோனா மரணங்கள்.. தமிழகத்தை உலுக்கும் ஹாப்பி ஹைபாக்ஸ்மியா!
விழிபிதுங்கும் பெங்களூர்
சென்னை, டெல்லி போன்ற நகரங்கள் ஏற்கனவே கடுமையான பாதிப்பை சந்தித்து தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. ஆனால் இவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவும் என்பதை பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளும், கர்நாடக அரசும் எதிர்பார்க்கவில்லை. எனவே செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு கூறியதை அப்படியே எதிரொலிப்பதானால், "இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்ற மனநிலையில்தான் பெங்களூர் மாநகராட்சி இருக்கிறது.
போன் போட்டாலும் வருவதில்லை
உதாரணத்திற்கு பல சம்பவங்களை சொல்ல முடியும். நாகேந்திரா என்ற பயோடெக் நிறுவனத்தின் ஊழியர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை இவ்வாறு சொல்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதும் மாநகராட்சியை தொடர்புகொண்டேன். எங்கள் வீட்டை சுற்றி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். நானே கோரிக்கை விடுத்தும் கூட அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மருத்துவர். அவருக்கு கொரோனா பாதித்திருந்தது. மாநகராட்சியை தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எந்த ஒரு அதிகாரியும், அல்லது கடைநிலை ஊழியர் கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை. வீட்டை சுற்றி கிருமிநாசினி கூடத் தெளிக்கவில்லை.
வெளியே செல்கிறார்கள்
இதையடுத்து, டாக்டர் வீட்டில் உள்ள பிற நபர்கள் வழக்கம் போல தங்கள் பணிக்கு சென்று வருகிறார்கள். அவர்களை தடுப்பதற்கு யாரும் கிடையாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் நாகேந்திரா. ஸ்ரேயாஸ் என்ற கல்லூரி பேராசிரியர் இதுபற்றி கூறுகையில், வைரஸ் பாதிப்பு தொடர்பாக தொலைபேசியில் அழைத்து கூறினால் நோயாளியின் விபரத்தை கூட மாநகராட்சி பதிவு செய்வது கிடையாது. வேறு வழியில்லாமல் நாங்களும் தனிமைப்படுத்திக் கொள்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு காரணம்
நிதின் ஜோஷி என்ற, ஐடி நிறுவன ஊழியர் கூறுகையில், எனது வீட்டில் இருக்கக்கூடிய சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களாக பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகளை போனில் தொடர்பு கொள்கிறேன். ஆனால் ஒருவர் கூட வந்து என்ன என்று கேட்கவில்லை. ஆரம்பத்தில் தங்களிடம் பரிசோதனை முடிவு ரிசல்ட் இல்லை என்று தெரிவித்து வர மறுத்தனர். பிறகு ரிசல்ட் அனுப்பி வைத்தபோது தங்களிடம் போதிய ஆட்கள் இல்லை என்று கூறி வர மறுத்து விட்டனர், என்று ஆதங்கம் தெரிவிக்கிறார். கண்டைன்மெண்ட் பகுதி என்ற போர்டு கூட வைப்பதற்கு ஆள் கிடையாதாம். இப்படித்தான் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் நிலவரம் உள்ளது.
சென்னை அருமை
சென்னையில் நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்ததாக உறுதி செய்யப்பட்டால், தனியாரோ அல்லது அரசு ஆய்வகமோ, எங்கிருந்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வீட்டுக்கு வந்து வெளியே நோட்டீஸ் ஓட்டுகிறார்கள். மேலும், தினமும் அவர்கள் தரப்பிலிருந்து நோயாளி தரப்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அன்றன்றைக்கு உள்ள நிலவரத்தை கேட்டிருக்கிறார்கள். மருத்துவ டிப்ஸ் கொடுக்கிறார்கள். 14 நாட்களுக்கு பிறகு வெளியே வைத்த நோட்டீசை அகற்றுகிறார்கள். மேலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. இந்த நிலவரத்தையும் பெங்களூர் நிலவரத்தையும், ஒப்பிட்டு பார்த்தால், இந்தியாவின் ஐடி தலைநகரம் எங்கே நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை எளிதாகக் கணிக்க முடியும்.