வளமான இந்தியா, வளமான மோடி... ராணுவத்தினருக்கு உதவுதல்.. பெங்களூர் தம்பதியின் தொடர் ஓட்டம்
பெங்களூர்: வளமான இந்தியா, பாதுகாப்பான இந்தியா, ராணுவ வீரர்களுக்கு உதவ வேண்டும் என்பவற்றை வலியுறுத்தி பெங்களூருவை சேர்ந்த தம்பதி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரை தொடர் ஓட்டம் மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் குமார்(57). இவரது மனைவி ரூபா (54). இவர்கள் வளமான இந்தியா, பாதுகாப்பான இந்தியா, ராணுவ வீரர்களுக்கு உதவ வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் ஸ்ரீநகருக்கு தொடர் ஓட்டத்தை நேற்று துவக்கியுள்ளனர்.
இவர்கள் தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் தினமும் 60 கிலோ மீட்டர்கள் ஓடி சுமார் 3600 கி.மீ. தூரத்தை வருகிற ஏப்ரல் மாதம் 10ம் தேதிக்குள் சென்றடைய திட்டமிட்டுள்ளனர்.
8 பேர் கொண்ட குழு
இதற்கென அவர்கள் ரூ. 30 லட்சம் செலவில் பேருந்து ஒன்றை வடிவமைத்து அதற்கு "நகரும் வீடு" என்று பெயர் வைத்துள்ளனர். அதில் குமார் தம்பதியுடன் இரண்டு ஓட்டுனர்கள், 2 சமையல்காரர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 8 பேர் உள்ளனர்.
ராணுவத்தினருக்கு
அந்த பேருந்தில் போஸ்ட் பாக்ஸ் போன்ற அமைப்பு ஒன்றுள்ளது. அதில் நிதியுதவி செய்ய விரும்புகின்றவர்கள் நிதியை செலுத்தலாம். இவர்கள் வழிநெடுகிலும் இராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய என நிதி சேகரித்து அதனை பிரதமர் நரேந்திர மோடி வழியாக ராணுவ வீரர்களிடம் கொடுக்கவுள்ளனர்.
முக்கிய நோக்கம்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நாங்கள் இருவரும் மோடியின் நலத்திட்டங்களை மக்கள் தெரியப்படுத்த இந்த தொடர் ஓட்டத்தை நடத்துகிறோம். அது போல் மோடியின் நல்லாட்சியையும் மக்களுக்கு எடுத்துரைப்பது என்பதும் எங்களது முக்கிய நோக்கமாகும்.
நீரிழிவு நோய்
மேலும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும் இந்த தொடர் ஓட்டத்தை கையில் எடுத்துள்ளோம். தற்போது இளம் வயதினர் கூட ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களில் பாதிக்கப்படுகின்றனர்.
முக்கிய காரணம்
இந்த நோய்கள் இந்தியாவுக்கு வந்ததற்கு காரணமே மக்களுடைய சோம்பேறித்தனமே ஆகும். மக்கள் வியர்வையை சிந்தாததே இதற்கு முக்கிய காரணமாகும். நாம் இங்கு நிம்மதியாக, சந்தோஷமாக தூங்குவதற்கு முக்கிய காரணமே ராணுவத்தினர்தான்.
பங்களிப்பு
அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்யவும் ராணுவத்தினர் நல நிதி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். வழிநெடுகிலும் பார்க்கும் மக்கள் எங்களுடனும் , எங்கள் வாகனத்துடனும் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். அவர்களிடம் ராணுவத்தினருக்கு ஏதாவது பங்களிப்பை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 50 வயதிற்கு மேலுள்ளவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் அப்போது தான் அவர்களது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.