அதிகரித்த மாசு.. பெங்களூர் ஏரி நீரில் விளைவித்த காய்கறிகளில் அதிக அளவு உலோகங்கள்.. ஆய்வில் ஷாக்
பெங்களூர்: பெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஏரி நீரைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பயிர்களில் அதிக அளவு உலோகங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த உணவுப் பொருட்களின் நுகர்வு நீண்ட காலத்திற்கு ஆபத்தானது என்று ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பைனாச், தக்காளி, நெல் மற்றும் பீட்ரூட் போன்றவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பயிர்களாகும். சேகரிக்கப்பட்ட அனைத்து பயிர் மாதிரிகளிலும் அதிக அளவு குரோமியம், காட்மியம் மற்றும் நிக்கல் இருந்தன.
அவை இந்திய தரநிலைகளின் (ஐ.எஸ்) கீழ் அனுமதிக்கப்படுகின்றன என்றபோதிலும் ஐரோப்பிய ஒன்றிய தரத்தின்படி ஒரு கிலோ பயிருக்கு 0.2 மி.கி.க்கு குறைவாக இருக்க வேண்டிய குரோமியம் ஒரு கிலோ பயிருக்கு 20 மி.கி என்ற அளவுக்கு உள்ளது.
உலோகங்கள்
பெங்களூர் விவசாய வேதியியல் மற்றும் மண் அறிவியல் துறை விஞ்ஞானி, என்.பி.பிரகாஷ் இதுபற்றி கூறுகையில், "எங்கள் மதிப்பீட்டில் அதிக அளவு காட்மியம், குரோமியம் மற்றும் நிக்கல் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். இந்த ஏரிகளில் இருந்து வரும் தண்ணீரை விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு பாசனம் செய்ய பயன்படுத்தும்போதும், ஏரியின் வண்டல்களை தங்கள் மண்ணை உரமாக்குவதற்குப் பயன்படுத்தும்போது, உலோகங்கள் உணவுச் சங்கிலியில் சேர்கின்றன என்றார்.
முக்கிய ஏரிகள்
"இலை காய்கறிகளில் திரட்சி விகிதம் அதிகமாக இருப்பதால், இலை காய்கறிகளில் அதிக அளவு உலோகங்கள் வேரிலிருந்து தண்டு வரை பயணிக்க அனுமதிக்கிறது. இது பல ஆண்டுகளாக ஏற்பட்ட மாசுபாட்டின் விளைவால் ஏற்பட்டது," என்று அவர் மேலும் கூறினார். பெங்களூரைச் சுற்றியுள்ள ஏரிகளான மார்கொண்டனஹள்ளி, எலே மல்லாபா ஷெட்டி (ஒய்.எம்.எஸ்), ஹோஸ்கோட் தொட்டகெரே, வர்தூர், பைரமங்கலா மற்றும் ஜிகினி ஏரிகள் போன்றவற்றின் நீர்ப்பாசன பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் கனரக உலோகங்கள் அதிக அளவுக்கு குவிந்துள்ளன.
சுவாசக் கோளாறு
குரோமியம் மற்றும் நிக்கல் ஆகியவை உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகும், ஆனால் அவற்றை அதிக அளவில் உட்கொள்ளும்போது அது கடுமையான சுகாதார பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். அதிகப்படியான குரோமியம் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, ரத்தத்துடன் அடிக்கடி வாந்தி போன்ற இரைப்பை குடல் நோய் அறிகுறிகளை இது ஏற்படுத்தும்.
உடல்நல பாதிப்புகள்
எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கிறது. நிக்கல் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, மூக்கு சைனஸ் அல்லது புற்றுநோய் போன்ற சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள், மருத்துவத் துறையினர்.
விஷமான ஏரிகள்
நச்சுத்தன்மையுள்ள உலோகங்கள் பெங்களூரில் பயிரிடப்படும் பயிர்களில் கலப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியாவது இது முதல் முறை அல்ல. 2017 ஆம் ஆண்டிலும், பெல்லந்தூர் மற்றும் வர்தூர் ஏரிகளை புனரமைக்க அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு, சிறிய அளவிலான சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் ஏரிப் பகுதியைச் சுற்றியுள்ள மண் நச்சு உலோகத்தால் சூழப்பட்டிருப்பதை கண்டறிந்தது. இந்த பகுதிகளில் மேயும் கால்நடைகளிலிருந்து வரும் பால் கூட அதை குடிப்போருக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் அப்போது கூறியிருந்தனர்.