மழைக்காலம்.. சளி, இருமல் இப்போ சாதாரணம்.. கொரோனா டெஸ்ட் தேவையா, இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது?
பெங்களூர்: மழை மற்றும் குளிர் காரணமாக பொதுமக்களுக்கு ஜலதோஷம் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு பெங்களூர் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தால், பெங்களூர் உட்பட கர்நாடக பகுதிகள் பலவற்றிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, குளிர் நிலவுகிறது. இவை அனைத்தும் சேர்த்து சளி, இருமல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக காற்றில் மாசுபாடு குறைந்து உள்ளதால், கடந்த சில மாதங்களாக மருத்துவமனைக்கு, சளி, இருமலுடன் செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருந்தது.
ஆயுர்வேதம்...குஜராத்துக்கு முக்கியத்துவம்...கேரளா தமிழ்நாடு புறக்கணிப்பு...ராஜ்ய சபாவில் எதிர்ப்பு!!
பரிசோதனை
ஆனால் கடந்த சில நாட்களாக பெங்களூர் நகரில், இதுபோன்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், நகரில் உள்ள பல மருத்துவமனைகளிலும் சளி, இருமல் என்று பயணிகள் சென்றாலே முதலில் கொரோனா பரிசோதனை எடுத்து அதன் முடிவுகளை காட்டி விடுங்கள் என்று தெரிவிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வேறுபாடு என்ன
இதுபற்றி பன்னேர்கட்டா சாலையில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் இன்டர்ணல் மருத்துவத் துறையின் இயக்குனர் சுதா மேனன் கூறுகையில், அலர்ஜி காரணமாக ஏற்படக்கூடிய ஜலதோஷம் மற்றும் கொரோனா ஜலதோஷம் ஆகியவற்றுக்கு இடையே சில அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. மழைக்காலத்தில் அலர்ஜி காரணமாக ஜலதோஷம் ஏற்படுவது இயல்புதான். இதனால் மூக்கு ஒழுகுதல், சைனஸ் காரணமாக தலைவலி மற்றும் இருமல் ஏற்படும்.
பரிசோதனை அவசியம்
அலர்ஜி காரணமாக உருவாகக்கூடிய ஜலதோஷம் பிறருக்கு பரவாது. அதே நேரம், ஜல தோஷம் உள்ளவருக்கு தொண்டை வலி, உடல் வலி, தலைவலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்தால் கூட அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உஷார் மக்களே
தொண்டைவலி என்று வருவோருக்கு மருத்துவர்கள் எளிதாக வைத்தியம் பார்த்து விட முடியாது என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில். ஏனெனில், வாயை திறந்து தொண்டையை பரிசோதிக்கும்போது மருத்துவருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கொரோனா நோயாளிகள் என்று தெரியாமல் தொண்டை பரிசோதனை ஈடுபட்ட, பல, காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களுக்கு நோய்த்தொற்று பரவி உள்ளதைப் பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே பொதுமக்கள், ஜலதோஷம் மற்றும் கொரோனா பிரச்சினை இதில் எது தங்களுக்கு தாக்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் முன்பாக, வீட்டை விட்டு மருத்துவமனை தவிர்த்து வேறு எங்கும், வெளியே செல்லாமல் தவிர்ப்பது நலன் பயக்கும்.