பெங்களூர் கலவர வழக்கில் திருப்பம்.. அரசியல் சித்து விளையாட்டு அம்பலம்! காங்கிரஸ் முன்னாள் மேயர் கைது
பெங்களூர்: பெங்களூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் மற்றும் தற்போதைய கவுன்சிலரான சம்பத்ராஜ் கைது செய்யபட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நள்ளிரவில் பெங்களூர் நகரின், கேஜிஹள்ளி மற்றும் டிஜேஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பெரும் வன்முறை வெடித்தது .
புலிகேசி நகர் தொகுதி எம்எல்ஏ காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி வீடு மீது தாக்குதல் நடைபெற்றது. அவர் வீட்டு வளாகத்தில் தீ வைக்கப்பட்டது.
திடுக்கிடும் திருப்பங்கள்
அகண்ட சீனிவாச மூர்த்தியின் மருமகன், தனது பேஸ்புக் பதிவில், இஸ்லாம் மதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் இஸ்லாமிய அமைப்பினர் திரண்டு வந்து போராட்டம் நடத்திய போது, அது வன்முறையாக மாறியதாக அப்போது தகவல்கள் வெளியாகியது. இருப்பினும் பெங்களூர் நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்ப்பட்டன.
உள் குத்து
மதம் சார்ந்த பிரச்சினை மட்டுமே இதன் பின்னணியில் இல்லை என்பதும், அரசியல் விளையாடியுள்ளது அம்பலமானது. அகண்ட சீனிவாச மூர்த்தி, மருமகன் அவ்வப்போது இஸ்லாம் மதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேஸ்புக்கில் கூறி வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு இஸ்லாமியர்களை எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்திக்கு எதிராக திருப்பி விடுவதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில பிரமுகர்களே ஈடுபட்டுள்ளனர்.
வேறு கட்சியிலிருந்து வந்தவர்
அகண்ட சீனிவாச மூர்த்தி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்து புலிகேசி நகர் தொகுதியில் எம்எல்ஏ ஆகியுள்ளார். எனவே, ஏற்கனவே அங்கு காங்கிரஸில் பதவிகளில் உள்ள தலைவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதில் ஒருவர்தான் முன்னாள் மேயரான சம்பத்ராஜ் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் சார்பாக, சிவி ராமன் நகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இவருக்கு செல்வாக்கு உள்ள பகுதி புலிகேசி நகர்தான்.
வேறு தொகுதியில் போட்டி
அகண்ட சீனிவாச மூர்த்தி போட்டியிட்டதால், அந்த தொகுதி இவருக்கு கிடைக்கவில்லை. இவரை புறநகர்ப்பகுதியில் உள்ள சிவி ராமன் நகரில் போட்டியிட காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அந்த தேர்தலில் இவர் தோற்றுவிட்டார். எனவே இதை மனசுக்குள் வைத்துக்கொண்டு, அகண்ட சீனிவாச மூர்த்தி மீது இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு தூண்டுதலாக சம்பத்ராஜ் இருந்தார் என்பது காவல்துறையின் குற்றச்சாட்டு.
எஸ்கேப்
இதுதொடர்பாக, ஏற்கனவே சம்பத்ராஜ் உதவியாளர் ரியாசுதீன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கொரோனாவுக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார் சம்பத்ராஜ். ஆனால் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் இருந்து அவர் தலைமறைவாகிவிட்டார். சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவர் தற்போது பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழர்
முன்னாள் மேயர் ஒருவரே, அதுவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகரே தனது சொந்தக் கட்சி எம்எல்ஏ வீடு மீது தாக்குதல் நடத்துவதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று பாஜக குற்றம்சாட்டுகிறது. சம்பத்ராஜ் பூர்வீகமாக தமிழர் என்பதும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர் என்பதும், குறிப்பிடத்தக்கது. இந்த கலவர பின்னணியில் சம்பத்ராஜ் மட்டுமே இருக்கிறாரா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள். காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் தூண்டுதலின்பேரில்தான் சம்பத் ராஜ் இதை செய்ததாகவும், இப்போது அந்த அமைச்சர் நைசாக நழுவி சம்பத் ராஜை பலிகடா ஆக்கிவிட்டார் என்றும், சில கர்நாடக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.