பெங்களூரில் ஒரு தாராவி.. கிளஸ்டராக மாறிய ஹொங்கசந்திரா.. அடுத்து சீல்தான்.. அச்சத்தில் தமிழர்கள்
பெங்களூர்: மும்பையில் ஒரு தாராவி போல, பெங்களூரில் ஹொங்கசந்திரா பகுதி மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராவியை போலவே, ஹொங்கசந்திராவும், ஏழை, எளியவர்கள் நெருக்கமாக குடியிருக்கும் ஒரு பகுதி என்பதோடு, இங்கும் கணிசமாக தமிழர்கள் வசிப்பதும் மற்றொரு ஷாக் ஒற்றுமையாகும்.
பெங்களூரின் தெற்கு பகுதியில், ஒசூர் நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது பொம்மனஹள்ளி. நகராட்சி பகுதியாக இருந்ததை, பெருநகர் பெங்களூர் பகுதிக்குள் சேர்த்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும். கார்மென்ட்ஸ் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. ஏழை, எளிய மக்கள், அதிலும் பெண்கள், இந்த கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகளில் வாரக் கூலிக்கு வேலை பார்த்து வருகிறார்கள்.
2 கி.மீ சுற்றளவுக்கு முழுக்க இதுபோன்ற ஏழை, எளியவர்கள்தான் வசிக்கிறார்கள். ஷேர் ஆட்டோவிற்கு 10 ரூபாய் கொடுக்கவும் கஷ்டம் என்பதால், 2 கிலோ மீட்டரோ, 3 கிலோ மீட்டரோ.. நடந்தே கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை செல்லும் நூற்றுக்கணக்கான, பெண் ஊழியர்களை இங்கு தினமும், காலை, மாலை பார்க்க முடியும்.
வாகன நெரிசலால் டிராபிக் ஆகிறதோ இல்லையோ, காலையும், மாலையும், ஏழை, எளிய பெண்கள் நடந்து செல்லும் கூட்டத்தில் ரோடு பிளாக் ஆகும் நிலையில் உள்ள ஒரு பகுதி. இதில் கணிசமானோர் தமிழர்கள்.
பொம்மனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியை 3 பிரிவுகளாக பிரிக்கலாம். பொம்மனஹள்ளி (கோர் ஏரியா), அனைத்து தரப்பும் கலந்து வாழும் பகுதி. அப்பர் மிடில் கிளாஸ், ஏழைகள், முஸ்லீம்கள், மிடில் கிளாஸ், தெலுங்கர்கள், தமிழர்கள் என கலந்து வாழ்கிறார்கள். ஹொங்கசந்திரா பகுதி, ஏழை, எளியவர்கள் அதிகம் வாழும் பகுதி. மக்கள் மிகுந்த நெருக்கமாக வசிக்கும் இடம். தகர கூரைகளுடன் வீடுகள், 10க்கு 10 அடி குட்டி வீடுகள் என, கிட்டத்தட்ட தாராவி போல காட்சியளிக்கும். இங்கு வட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தமிழர்கள் கணிசமாக உள்ளனர். கன்னடர்களும் உண்டு.
சோப்பும் ஆடம்பர பொருள்.. வேலையில்லை.. உணவுமில்லை, துயரம் மட்டுமே மிச்சம்.. கண்ணீரில் தாராவி மக்கள்
அதற்கு அடுத்த ஏரியாவான, மாருதி லேஅவுட், ராயல் மெரிடியன் லேஅவுட், மைக்கோ லேஅவுட், விஸ்வபிரியா லேஅவுட் போன்றவை, அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் பணக்காரர்கள் ஏரியாவாக பார்க்கப்படுகிறது. இங்கு, மலையாளிகள் கணிசமாக உள்ளனர். தெலுங்கர்களும் உண்டு. அதற்கு அடுத்த ஏரியா பேகூர். அது கன்னடர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஏரியா. மிடில் கிளாஸ் மற்றும் ஏழைகள் அதிகம். பல தலைமுறைகளாக பூர்வீகமாக அங்கேயே வசிக்கும் கன்னடர்கள் அவர்கள்.
பேகூரிலும் ஒன்றிரெண்டு கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தாலும், பொம்மனஹள்ளி பகுதியில், இப்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதி ஹொங்கசந்திரா. அங்கு வசித்த பீகாரை சேர்ந்த 54 வயது தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அவர் யார் யாரை தொடர்பு கொண்டார் என்பதை அதிகாரிகள் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
10 அடிக்கு 10 அடி கொண்ட சிறு வீட்டில், இவர் 4 சக தொழிலாளிகளுடன் தங்கியிருந்துள்ளார். 15 நாட்களாக நோய் அறிகுறி தெரிந்தும், நேற்றுதான், அவருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, உடனடியாக அவர் யார் யாருடன் பழகினாரோ அவர்களை தேடி தேடி போலீசார் பிடித்து தனிமைப்படுத்தி வருகிறார்கள். இதுவரை ஹொங்கசந்திராவில் 150 பேருக்கும் மேற்பட்டோர், இவ்வாறு கண்டறியப்பட்டு, ஆங்காங்கு உள்ள ஹோட்டல்களில் உள்ள அறைகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பீகார் தொழிலாளியுடன் பழகிய 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரே பகுதியில் 10 பேருக்கு ஒரே நேரத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஹொங்கச் சந்திரா ஏரியாவே ஒரு கிளஸ்டராக மாறிவிட்டது. இதுகுறித்து பெங்களூர் மாநகராட்சி மேயர் கவுதம் குமாரிடம் கேட்டபோது, ஹொங்கசந்திரா பகுதியை சீல் வைப்பது குறித்து, அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். இப்போதைக்கு, பீகார் தொழிலாளி வசித்த பகுதியிலிருந்து 100 மீட்டர் தூரம் மட்டும் சீல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே பொம்மனஹள்ளி தொகுதி முழுக்கவே இந்த சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த ஏரியாவிலுள்ள கடைகளை அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அவசர அவசரமாக மூடி வருவதை பார்க்க முடிந்தது. பீகார் தொழிலாளி அந்த பகுதியில், ஆட்டோவிலும் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் எத்தனை பேருக்கு இதனை பரப்பினாரோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
முதலில் அந்த நோயாளி சிகிச்சைக்காக சென்ற, ஹொங்கசந்திராவிலுள்ள, வேணு மருத்துவமனையின் டாக்டர், இதுகுறித்து போலீசுக்கு தெரிவிக்கவில்லை. சுவாச பிரச்சினை நோயாளிகள் அனைவர் குறித்தும் தகவல் அறிந்ததும், போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை மருத்துவர் மீறிவிட்டார். இதனால் அந்த மருத்துவமனைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.