பெங்களூர் நகருக்குள் சிறுத்தை.. சிசிடிவியில் பதிவான பரபர காட்சி! மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வார்னிங்
பெங்களூர்: பெங்களூர் நகரத்தில் குடியிருப்பு வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்த சம்பவத்தால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
மலை மற்றும் காடுகளில் அமைந்துள்ள ஊர்களுக்குள் வன விலங்குகள் புகுந்து விடுவது அவ்வப்போது நடக்கக்கூடிய சம்பவம். குன்னூர், ஊட்டி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
ஓசூர் நகரத்துக்குள் இப்படித்தான் சிறுத்தை முன்பு ஒருமுறை புகுந்து அட்டகாசம் செய்தது. மைசூர் நகருக்குள் யானை ஒன்று புகுந்து பால் வியாபாரியை மிதித்துக்கொன்றது.
அப்பார்ட்மென்ட் உள்ளே சிறுத்தை
பெங்களூர் நகரிலும் ஒயிட்பீல்டு உள்ளிட்ட கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் இதற்கு முன்பு ஒரு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. ஆனால் இப்போது தெற்கு புற நகர்ப்புற பகுதிக்குள் சிறுத்தை புகுந்து உள்ளது. பெங்களூர் நகரின் பொம்மனஹள்ளி அருகேயுள்ள பேகூர் அடுத்த, ஏலேனஹள்ளி என்ற புறநகர் பகுதியில் உள்ளது பிரஸ்டீஜ் சாங் ஆஃப் சவுத் என்ற அபார்ட்மெண்ட். சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது.
Leopard spotted at an apartment off Bannerghatta road prestige song of South . Bengaluru. Karnataka #leopard #PrestigeSongOfSouth pic.twitter.com/VRXYQQBBTW
— ALL IZ WELL❤ (@balasundari11) January 24, 2021
அதிகாலை நேரம்
இங்கு நேற்று காலை 5.30 மணி அளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. கார்கள் பார்க் செய்யப்பட்டு இருக்கக்கூடிய பகுதியில் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அது ஓடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை கவனித்த காவலர்கள் உடனடியாக நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அப்பார்ட்மெண்ட் வாட்ஸ் அப் குழு மூலமாக எச்சரிக்கை பிறப்பித்தனர்.
வாட்ஸ்அப் எச்சரிக்கை
காலை, 6:43 மணியளவில் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பாளர்களின் வாட்ஸ்அப் குரூப்புக்கு ஒரு மெசேஜ் சென்றது. அதில், 12/14 டவர் அருகே ஒரு சிறுத்தை வந்துள்ளது. வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் நீங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். குறிப்பாக குழந்தைகளை வெளியே விட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது.
பீதியில் மக்கள்
இதையடுத்து குடியிருப்புவாசிகள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் கதவு, ஜன்னல்களை பூட்டிக்கொண்டு வெளியே என்ன நடக்கிறது என்பதை பீதியோடு பார்த்தனர். அந்த குடியிருப்பு மட்டுமின்றி அருகிலுள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளுக்கும் அந்தந்த நிர்வாகங்கள் வாட்ஸ்அப் மூலமாக எச்சரிக்கையை தெரிவித்தன. அவர்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்தனர்.
வனத்துறை ரோந்து
இதனால் பேகூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுபற்றி பெங்களூரு நகர்ப்புற வனத்துறை உதவி கன்சர்வேட்டர் வெங்கடேஷ் கூறுகையில், 11:30 மணி அளவில் அந்த பகுதி முழுக்க சோதனை போட்டு முடித்தோம். அதற்குள்ளாக சிறுத்தை தப்பிவிட்டது. இருப்பினும் எலக்ட்ரானிக் சிட்டி, சிக்கதோகூர், தொட்டதோகூர், காயத்தனஹள்ளி உள்ளிட்ட அக்கம்பக்கத்து பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது பற்றிய எச்சரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் சில நாட்களுக்கு வனத்துறையினர் இந்த பகுதிகளில் ரோந்து சுற்றி வருவார்கள்.
கோழிப் பண்ணைகள்
பெங்களூர் புறநகர் பகுதியில் கோழிப்பண்ணைகள் அதிக அளவில் உள்ளன. இதன் வாடை காரணமாக, பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வந்திருக்கலாம். மேலும் தெரு நாய்களை அடித்து சாப்பிடுவது சிறுத்தைகளுக்கு இஷ்டமான ருசியான உணவு. அதற்காகவும் நகருக்குள் வந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
சிறுத்தை பிடிபடவில்லை
இதுவரை சிறுத்தை பிடிபடவில்லை என்பதால், தெற்கு பெங்களூர் மக்கள் அச்சத்தோடு இருக்கிறார்கள். பெங்களூரின் புறவட்டச் சாலையான நைஸ் சாலையில் சில நேரங்களில் சிறுத்தை தென்பட்டிருக்கிறது. ஆனால், நைஸ் ரோட்டை தாண்டி நகர்ப்புற பகுதிக்குள் முதல் முறையாக சிறுத்தை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பன்னேருகட்டா வனப் பகுதியில் சிறுத்தை, புலி மற்றும் யானைகள் உள்ளன. சபாரி செல்வோர் புலி மற்றும் யானையை நேரடியாக பார்க்க முடிகிறது. அதேநேரம் வேலி போட்டு அவை தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறுத்தைகள் எப்படியோ தப்பித்து ஓடிவிடுகிறது.