எகிறிய பிஸினஸ்.. குவிந்த வருமானம்.. திடீரென பெங்களூரில் முழு ஊரடங்கு.. வேதனையோடு கிளம்பிய மக்கள்
பெங்களூர்: அறிவிக்கமாட்டோம், அறிவிக்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி விட்டு திடீரென, பெங்களூருக்கு, ஒரு வாரம் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது எடியூரப்பா அரசு.
ஏமாற்றப்பட்ட வேதனையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பெங்களூரு நகரில் இருந்து மூட்டை முடிச்சுகளோடு சொந்த ஊர்களுக்கு செல்லும் காட்சி வேதனை அளிப்பதாக உள்ளது.
ஜூலை 14ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு 8 மணி முதல் ஜூலை 22 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை பெங்களூரு நகரில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று எடியூரப்பா 2 தினங்கள் முன்பு அறிவித்தார்.
காத்திருந்த தலைகள்.. கண்ணசைத்த அமித் ஷா.. சச்சின் பைலட்டை வளைக்க தயாராகும் ராஜஸ்தான் பாஜக!
திரும்ப திரும்ப கூறிய அரசு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெங்களூர், பொது போக்குவரத்து துவங்கியதன் காரணமாக அந்த கட்டுப்பாட்டை இழந்தது. தினமும் 1500 க்கும் மேற்பட்ட கேஸ்கள் பதிவாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளார் எடியூரப்பா. ஆனால் இந்த முடிவை அறிவிப்பதற்கு சில தினங்கள் முன்பு வரைகூட, லாக்டவுன் கொண்டு வரப்படாது, பெங்களூர் வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என்று எடியூரப்பாவும் அவரது அமைச்சரவை சகாக்களும் திரும்பத் திரும்ப கூறி வந்தனர்.
மூட்டை முடிச்சுகள்
திடீரென்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அவசர அவசரமாக கூட்ட நெரிசலில் சிக்கி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பாக எப்படி தங்கள் சொந்த ஊர்களுக்கு மூட்டை முடிச்சுகளோடு தமிழர்கள் சென்றார்களோ, அதேபோல கன்னடர்களும், தங்களது சொந்த ஊர் மற்றும் கிராமங்களுக்கு மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிச் சென்றனர். பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதிகரித்த வருமானம், வியாபாரம்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ .100 கோடிக்கும் குறைவாக கர்நாடகாவில் ஜிஎஸ்டி வசூலானது. ஆனால் ஜூன் மாதத்தில் கர்நாடகாவின் ஜிஎஸ்டி வசூல் ரூ .7,000 கோடியைத் தாண்டியது. வணிகத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது இதற்கு காரணம். இதில் பெங்களூர் பங்கு முக்கியம். ஆனால், இரண்டாவது சுற்று லாக்டவுனை எடியூரப்பா அரசு அறிவித்துள்ளதால், மெதுவாக முன்னேறி வந்த தங்கள் தொழில் என்னாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர், வியாபாரிகள்.
நிறைய சலுகைகள்
அதே நேரம் பிற நகரங்களில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கிலிருந்து, பெங்களூரில் அமலுக்கு வரும் ஊரடங்கு வித்தியாசமாக இருக்கிறது. ஏனெனில் அத்தியாவசியமற்ற பொருட்களாக இருந்தாலும் கூட இ-காமர்ஸ் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று பொருட்களை டெலிவரி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் வசதி உள்ளது.
ஊரடங்கில் எவையெல்லாம் இயங்கும்?
ரயில்கள் மற்றும் விமானங்கள் போன்ற பயணங்களுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால், அது வழக்கம்போல இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து, காய்கறி கடை, பால் விற்பனையகங்கள், மீன் மற்றும் இறைச்சி விற்பனை கூடங்கள், காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக ஆட்டோ அல்லது டாக்ஸி போன்றவற்றை இயக்குவதற்கு அனுமதி உள்ளது. அதேநேரம், காவல்துறை, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைத் துறைகளை தவிர்த்து, பிற துறைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. காய்கறிகள், பழச் சந்தைகளுக்கும் வழக்கம்போல் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.