2 கொலை, பல கொள்ளை.. ஹாயாக பைக்கில் சென்ற பிரபல ரவுடி.. சுட்டு பிடித்த பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடியை பெங்களூர் காவல்துறையினர் சுட்டுபிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், பனசங்கரி, எடியூரு ஏரி பகுதியை சேர்ந்தவர் ஷசாங் (24). ஹுலிமாவு காவல்துறை சரகத்தில் நடைபெற்ற கொலை சம்பவம், பெங்களூரு ஊரக பகுதியில் உள்ள பன்னேர்கட்டா காவல் நிலையத்தில் பதிவான கொலைச்சம்பவம், ராஜாஜி நகர் மற்றும் கோனனகுண்டே, பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இவர் மீது காவல்துறையில் வழக்கு உள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் பெங்களூரு-ஓசூர் சாலையில் உள்ள அத்திப்பள்ளி என்ற பகுதியில், ஸ்கூட்டரில் ஷசாங் சென்றுள்ளார். அப்போது, அங்கு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்த ஷசாங், தப்பியோடியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விரட்டிச் சென்றனர். இந்த சம்பவத்தின்போது தலைமை காவலர் பிரகாஷ் இடதுகை மீது ஷசாங், தாக்குதல் நடத்தியுள்ளார். இதை பார்த்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலாஜி வானத்தை நோக்கி இரண்டு ரவுண்டுகள் தனது துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் அதை மதிக்காமல், தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் ஷசாங். எனவே, அவரது முழங்காலை நோக்கி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலாஜி துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஷசாங், அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முன்னதாக, சாலையில் நடந்து சென்ற சிலரை, வழிமறித்து, கத்தியால் அவர்களைத் தாக்கி, செயின், மோதிரம், மொபைல், பர்ஸ் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடி வந்த போதுதான் காவல்துறையினரை பார்த்து பயந்து ஷசாங் திரும்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.