முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு... 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டை!
Recommended Video
பெங்களூரு : நிதிநிறுவனம் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை தீர்த்து வைப்பதாகக் கூறி பேரம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார். ஜனார்த்தன ரெட்டியை 4 தனிப்படை போலீசார் 3 மாநிலங்களில் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் அம்பிடென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மோசடி தொடர்பாக பரீத் முது அமலாக்கத்துறை வழக்கும் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பரீத் பலரை அணுகியுள்ளார்.
அப்போது தான் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியின் உதவியை பரீத் நாடியுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுள்ளார்.
இந்த விஷயம் வெளியானதையடுத்து அவர் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் ஜனார்த்தன ரெட்டி நேற்று முதல் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஜனார்த்தன ரெட்டியை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.