Exclusive: உதவிக்கு வர மாட்டாங்க, சுடுங்க.. உத்தரவிட்ட அதிகாரி! பரபர பெங்களூர் போலீஸ் உரையாடல் ஆடியோ
பெங்களூர்: மத ரீதியிலான பேஸ்புக் போஸ்ட் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தால் பெங்களூரில் டிஜே ஹள்ளி காவல் நிலையம் இரவோடு இரவாக சூறையாடப்பட்டது.
Recommended Video
அந்த காவல் நிலையத்திற்குள் சிக்கியிருந்த கான்ஸ்டபிள்கள் உயிர் பயத்தில் வயர்லெஸ் மூலமாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு கான்ஸ்டபிள் அழும் நிலைமைக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கேட்ட வயர்லெஸ் உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பெங்களூர் கலவரம்.. நகரம் முழுக்க போலீஸ் குவிப்பு.. எடியூரப்பா அவசர ஆலோசனை
எம்எல்ஏ உறவினர்
பெங்களூரின், புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி என்பவரின் உறவினர் நவீன் தொடர்ந்து இஸ்லாம் மதத்துக்கு எதிராக ஃபேஸ்புக் போஸ்ட் வெளியிட்டு வந்துள்ளார். இதுபற்றி காவல்துறையிடம் இஸ்லாமிய அமைப்பினர் அவ்வப்போது புகார் செய்து வந்துள்ளனர். ஆனால் எம்எல்ஏ உறவினர் என்பதால், காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்கியுள்ளது.
பேஸ்புக் போஸ்ட்
இந்த நிலையில்தான் நேற்றும் மோசமாக வரிகளுடன் ஒரு பேஸ்புக் போஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் கோபம் அதிகரித்துள்ளது. இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று சேர்ந்து, இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து துணை போலீஸ் கமிஷனர் அங்கு வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வழக்கு பதிவு செய்வதாக உறுதி அளித்து உள்ளார்.
காவல் நிலையம் முற்றுகை
இருப்பினும், காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில் ஒரு பிரிவினர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு, காவல்துறையினருக்கு எதிராக, கண்டன கோஷங்களை எழுப்பினர். கல்வீசி தாக்கினர், சில வாகனங்கள் தீ வைக்கப்பட்டது. இதேபோன்று எம்எல்ஏ தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டி எம்எல்ஏ வீட்டு மீதும் கல்வீசி தாக்குதல் நடைபெற்றது.
துப்பாக்கிச் சூடு
இந்த நிலையில்தான், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மூன்று உயிர்கள் பறிபோயின. முன்னதாக, துப்பாக்கி சூடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் தனது உயர் அதிகாரிகளை வாக்கிடாக்கி மூலமாக தொடர்பு கொள்ளும் ஆடியோ, "ஒன்இந்தியா தமிழுக்கு" கிடைத்துள்ளது.
போலீஸ் வாக்கி டாக்கி ஆடியோ
அந்த ஆடியோவில் அருகே கேஎஸ்ஆர்பி (கர்நாடகா ரிசர்வ் போலீஸ் படையினர்) யாரும் இருக்கிறார்களா என்று ஒரு அதிகாரி கேட்கிறார். இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்த கான்ஸ்டபிள், "இங்கு ரிசர்வ் போலீஸ் படையினர் யாரும் இல்லை.. நாங்கள் எல்லோரும் உள்ளே இருக்கிறோம்.. துப்பாக்கி சூடு செய்து ஆகவேண்டி உள்ளது சார்" என்கிறார். மற்றொரு அதிகாரி பேசும்போது, "செய்யுங்கள் செய்யுங்கள் சார்.. யாரும் உங்களை காப்பாற்றப் போவதில்லை. உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்கிறார். மற்றொரு முறை கான்ஸ்டபிள் கிட்டத்தட்ட அழும் தொனியில் பதற்றத்தோடு பேசுகிறார். "ப்ளீஸ் நாங்கள் செய்தே தீருவோம் சார்" என்கிறார். அப்போது மற்றொரு உயரதிகாரி பேசுகிறார். "உங்களுடைய தற்காப்புக்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். முடிவெடுங்கள் ஃபையரிங் செய்யுங்கள் (டிசைட் மாடி, ஃபையர் மாடி)" என்று திட்டவட்டமாக அவர் கூறுகிறார். இதையடுத்து அந்த கான்ஸ்டபிள் குரலில் சற்று தெம்பு அதிகரிக்கிறது. "தேங்க்யூ சார்" என்று அவர் கூறுகிறார். இவ்வாறு அந்த உரையாடல் நிகழ்கிறது.
சினிமா மாதிரி பரபரப்பு
இதன் பிறகுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் வரும் காட்சிகளை போல இந்த கலவரச் சூழல், வாக்கிடாக்கி உரையாடல் போன்றவை இருந்துள்ளன. ஒட்டுமொத்த வடக்கு பெங்களூரும், வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டால் இரவில் இருந்து கிடுகிடுத்து போயுள்ளது. நகரம் முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.