கொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் பெங்களூர் மருத்துவமனைகள்.. தப்பிக்க ஹெல்ப்லைன் இருக்கு பாஸ்
பெங்களூர்: அரசு நிர்ணயித்த கொரோனா சிகிச்சை கட்டணங்களைவிட, தனியார் மருத்துவமனைகள் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதால் விழி பிதுங்கிப் போயுள்ளனர் பெங்களூர்வாசிகள்.
கொரோனா அதிகரிப்பு காரணமாக, பெங்களூரில் தனியார் மருத்துவமனைகள் பலவும் பெட் இல்லை என கைவிரித்து வருகின்றன. ரொம்பவே மெனக்கெட்டு பெட் கேட்கும் நோயாளிகளுக்கு இஷ்டத்திற்கு கட்டணத்தை நிர்ணயிக்கின்றன.
கர்நாடக அரசு, கொரோனா சிகிச்சைக்கு சில கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அரசு பரிந்துரையின்பேரில் அட்மிஷன் போட்டால், அதற்கு கட்டணம் கிடையாது.
அரசு காப்பீட்டு அறக்கட்டளையான சுவர்ணா ஆரோக்கிய சுரக்ஷா அதற்கான செலவீனத்தை ஏற்குமாம். ஆனால் பிற கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனை இஷ்டத்திற்கு வசூலிக்க முடியாது. ஜூன் 23ம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, பொது வார்டுக்கு நாளொன்றுக்கு ரூ .10,000 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம்
ஒரு நாளைக்கு எச்.டி.யு வார்டு கட்டணம் ரூ .12,000 ஆகவும், வென்டிலேட்டர் இல்லாத ஐ.சி.யு அறைகளுக்கு ரூ .15,000 ஆகவும், வென்டிலேட்டருடன் கூடிய ஐசியூவாக இருந்தால், ஒரு நாளைக்கு ரூ .25,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பிபிஇ மற்றும் உணவு ஆகியவையும் அடங்கும். ஆனால், சிவாஜிநகரைச் சேர்ந்த ஒருவர் 8 நாட்கள் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்ததற்கு ரூ.2.4 லட்சம் பில் போடப்பட்டதாக குமுறியுள்ளார்.
வளையலை விற்று பணம் செலுத்தினார்
அவரின் மனைவி இரண்டு தங்க வளையல்களை ரூ .70,000 க்கு விற்று, மருத்துவமனைக்கு செலுத்த பணத்தை பயன்படுத்தினார். காப்பீடு இல்லாததால் பில் செலுத்த கடன் வாங்குவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லையாம். இருப்பினும், அரசு காப்பீட்டு அறக்கட்டளையான சுவர்ணா ஆரோக்கிய சுரக்ஷாவிடம் அவர் தனது செலவீனத்தை திரும்ப கொடுக்க, அப்ளை செய்துள்ளாராம். அரசு பணத்தை திரும்ப செலுத்தினால்தான், கடனை அடைக்க முடியும் என்று புலம்புகிறார் அந்த நபர்.
விழிப்புணர்வு தேவை
பெரும்பாலான நோயாளிகள் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு, மருத்துவமனைகளில் ஒதுக்கப்படும் பெட் வகைகளைப் பற்றி தெரிவது கிடையாது. விழிப்புணர்வு இல்லாததால் இந்த பிரச்சினை எழுகிறது. பொது இடங்களில் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, மருத்துவ செலவு இலவசம் என்று மட்டும் தெரிவிக்கின்றன. ஆனால் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மாநகராட்சியை நம்பினால், நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக பெரும்பாலான மக்கள் பயப்படுகிறார்கள், எனவே அவர்கள் நேரடியாக தனியார் மருத்துவமனைகளை அணுகுகிறார்கள். எனவே சிகிச்சைக்கு பணம் செலவிட வேண்டிய நிலை வருகிறது.
44 சதவீதம் ஆஸ்பத்திரிகள்
கொரோனா சிகிச்சைக்கு அனுமதி கொடுக்கப்பட்ட பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சுவர்ணா ஆரோக்கிய சுரக்ஷா அதிகாரிகள், ஆய்வு நடத்தினர். அதில் 44 மருத்துவமனைகள் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டறிந்தனர். தனியார் மருத்துவமனைகளின் பேராசை, மக்களிடம் அரசு திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது ஆகியவை இதற்கு காரணம் என்கிறார் ஒரு அதிகாரி.
கொள்ளை லாபம்
"ஆரம்பத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகள், பிற நோயாளிகள் வருவதில்லை என காரணம் சொல்லி அரசிடம் நிதி உதவி கேட்டன. இப்போது கொரோனாவை பயன்படுத்தி கொள்ளையடிக்கின்றன. இது சமூகத்திற்கு சேவை செய்வதற்கான நேரம். இங்கு தனியார் மருத்துவமனைகள் அரசிடமும் பணம் கேட்கின்றன, நோயாளிகளிடமும் பணம் வசூலிக்கின்றன." என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
தீர்வு இதுதான்
எனவே, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வசூலித்தால், நீங்கள் சுவர்ணா ஆரோக்கிய சுரக்ஷா அமைப்பின் கட்டணமில்லா எண்களான 1800-425-8330 மற்றும் 1800-425-2646 ஆகியவற்றை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உங்கள் மருத்துவமனை பில்களின் நகல்களை வழங்குமாறு அப்போது அதிகாரிகள் கேட்பார்கள். ரெடியாக வைத்திருக்கவும். அரசு பரிந்துரையின் கீழ் நீங்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், தனியார் வசூலித்த கூடுதல் பணத்தை திரும்பப் பெற இது உங்களுக்கு உதவும்.