பகல் கொள்ளை.. 14 நாள் பரிதாபம்.. இதை பார்த்த பிறகும் பெங்களூர் போக ஆசைப்படுவீங்களா தமிழக மக்களே?
பெங்களூர்: இ பாஸ் வைத்திருக்கும், தைரியத்தில், நெல்லையிலிருந்தோ, கோவையிலிருந்தோ, திருச்சியிலிருந்தோ அல்லது சென்னையில் இருந்தோ பெங்களூருக்கு நீங்கள் ஆனந்தமாக கிளம்பி இருப்பீர்கள். ஆனால் இந்த சந்தோஷம் தமிழக எல்லை முடிவடையும்வரைதான்.
Recommended Video
ஒசூரை தாண்டியதும் வருகிறது அத்திபெலே எனும் பகுதி. கர்நாடகாவின் எல்லை பகுதி இதுதான். இங்கு குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினர் நீங்கள் வைத்திருக்கும் பாஸை, ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள்.
"ஈக்கடே பருபாரது.. அங்கே ஹோகி.." என்ற வார்த்தை உங்கள் செவிப்பறையை கிழிக்கும். அப்படியே ஊரைப் பார்த்து திரும்பிச் செல்லுங்கள் என்பதுதான் இதன் பொருள்.
சென்னையில் கொரோனா கிடுகிடு உயர்வு... எங்கு எவ்வளவு பாதிப்பு.. வெளியானது லிஸ்ட்
ஆஃபர்
இன்னும் கொஞ்சம் நீங்கள் கெஞ்சினால்.. இரக்கப்பட்டு, பெரியமனது பண்ணி, ஒரு ஆஃபர் உங்களை நோக்கி அள்ளி வீசப்படும். "ஓகே.. பன்னி.. ஆதரே.. 14 தினா, நீவு கோரன்டைன் சென்டரல்லி இருபேக்காகுத்தே.." என்பதுதான் அந்த ஆஃபர். இதற்கான சப் டைட்டில்: ஓகே.. வாங்க.. ஆனால்.. 14 நாட்கள், நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருக்க வேண்டிவரும்.
பகல் கொள்ளை
பலரும் கெஞ்சிக் கூத்தாடி பார்ப்பார்கள். வழி இல்லை என்று தெரிந்ததும், ஊருக்கே திரும்பிச் செல்வார்கள். ஒரு சிலர் எப்படியும் நமது தொழில் அல்லது வேலைக்காக பெங்களூருக்கு சென்றுதான் ஆகவேண்டும். அவர்கள் சொல்லகூடிய இடத்துக்குத்தான் போவோமே என்றும் செல்கிறார்கள். ஆனால் இங்குதான் ஆரம்பிக்கிறது சிக்கல். தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது என்கிறார்கள், ஏற்கனவே அங்கு சென்று சிக்கி சின்னாபின்னமாகியுள்ளோர்.
இப்படித்தான் நடக்கிறது
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் அப்படி என்னதான் நடக்கிறது என்கிறீர்களா? இதோ பாருங்கள்: கடந்த பிப்ரவரி மாதம் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார் அரவிந்த். ஆனால் மார்ச் மாதம் நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், விமானம் ரத்தானது. அங்கேயே சிக்கி.. இருக்கும் பணத்தையெல்லாம் செலவிட்டார். இடையில் ஒரு சிறப்பு ரயில் பெங்களூருக்கு, இயக்கப்படவே அதில் எப்படியோ இடம் பிடித்து பெங்களூர் வந்து சேர்ந்தார். குடும்பத்தை பார்க்க போகிறோம் என்று எதிர்பார்த்தவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. எங்களிடம் சில பிளான்கள் இருக்கிறது. இதில் எந்த பிளான் உங்களுக்கு தேவை என்று கேட்டனர் கர்நாடக அதிகாரிகள்.
|
ஹோட்டல் பிளான்கள்
என்னடா இது, என்று வியப்பாக பார்த்தால் அவர் தங்குவதற்கான ஹோட்டல் அறை பற்றிய பிளான் தான் அது. ஏற்கனவே பணம் காற்றில் கரைந்துவிட்டதால், இருப்பதிலேயே குறைந்த பிளான், ஒரு நாளைக்கு 750 ரூபாய் என்ற ரூமை தேர்ந்தெடுத்தார் அவர். 14 நாட்கள், தினமும் 750 ரூபாய் என்றால் மொத்தம் எவ்வளவு? 10,500 ரூபாயாச்சே.. இப்படி கணக்கு போட்டுப் பார்க்கும் போதே தலைசுற்றியது அவருக்கு. ஆனால் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கக்கூடிய காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அரவிந்த் அழைத்து வரப்பட்டதும், தலைசுற்றல் மட்டுமல்ல, நெஞ்சு வலியே வந்துவிட்டது.
2 கி.மீக்கு அரசு பஸ்சில் ரூ.200
ஏனெனில் ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் வாடகை என்று அங்கு வேறு மாதிரி பேசப்பட்டது. 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசு பஸ்சில் அழைத்து வருவதற்கு 200 ரூபாய் கட்டணம் வாங்கும்போதே இது பெரிய பகல் கொள்ளை என்று அவருக்கு புரிந்திருக்க வேண்டும். ஆனால் பாவம் ஹோட்டல் வந்தபிறகுதான், நிலைமை தெரிந்தது. இப்போது ஹோட்டல் அறைக்குள் இருந்தபடி இப்படி, ஏமாற்றி விட்டீர்களே என்று தனது ட்விட்டர் அக்கவுண்ட் மூலமாக புலம்பி வருகிறார் அவர்.
வசதிகள் இலல்லை
இது மட்டுமா, இத்தனை ரூபாய் செலுத்தி ஹோட்டலில் அறை எடுத்து தங்கினாலும் வைஃபை வசதி கிடையாது. ஏசி வசதி கிடையாது. அறையும் சுத்தமாக இல்லை என்று வேதனைப்படுவோரும் உண்டு. ஹோட்டல் ரூம்கள் புக் செய்து கொடுக்கக் கூடிய ஆப் வழியாக சுமார், 800 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த வசதிகளுக்கு, சுமார் இரண்டாயிரம் ரூபாய் வசூலிக்கிறார்களே, என்கிறார்கள்.
தலையணை, பெட்ஷீட்
தலையணை கொடுக்கப்படுவதில்லை, பெட்ஷீட் மாற்றப்படுவது கிடையாது, இப்படித்தான் கொரோனா வைரஸை இவர்கள் ஒழிக்கப்போகிறார்களா என்று கேட்கிறார்கள் அங்கே தங்கியுள்ளவர்கள். பெங்களூரு நகரில் மட்டும் இந்த நிலைமை கிடையாது. கர்நாடகாவின் பிற நகரங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஓட்டல்களிலும் இதுதான் கதி.
பிற நகரங்கள்
கல்புர்கி நகரில் எப்படி ஹோட்டல் அறை இருக்கிறது என்பதை இந்த நெட்டிசன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். கொரோனா வைரசை ஒழிக்கிறேன் என்று கூறி, சுத்தமில்லாத இந்த ஹோட்டல்களில் தங்க வைத்து, புதிதாக ஏதும் நோயை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் இவர்கள். எனவே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு செல்வதை விட நீங்கள் ஊருக்கு செல்வதுதான் சிக்கனமானது, பாதுகாப்பானது மக்களே.
நிலைமை மாறலாம்
ஜூன் 1ம் தேதிக்கு பிறகு நிலைமை மாறக்கூடும். அதன் பிறகு தமிழக வாகனங்கள் நேரடியாக அவர்கள் வசிக்கக்கூடிய வீடுகளுக்கு அனுப்பப்படும். அதுவரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில் மே மாதம் 31ம் தேதி வரை தமிழக வாகனங்களை கர்நாடகாவில் எல்லைக்குள் விடமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் எடியூரப்பா என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.