இதுவரை இல்லாத அளவு குறைந்த பகல் நேர வெப்பம்.. உறைந்துபோன பெங்களூர்.. வானிலை மையம் எச்சரிக்கை
பெங்களூர்: ஒரு பக்கம், விட்டுவிட்டு மழை, மற்றொரு பக்கம் கடும் குளிர் என்று இரட்டைத் தாக்குதல் சிக்கியுள்ளது பெங்களூர் நகரம்.
பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, குறைந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிவிக்கான கட்டுப்பாடுகளைவிட இணைய மீடியாக்களுக்குதான் கடிவாளம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
ரெட் அலர்ட்
தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 72 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷிமோகா, சிக்கமகளூர், குடகு மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, ரெட் அலர்ட்டை, வானிலை ஆய்வு மையம் பிறப்பித்துள்ளது. அதிகபட்சமாக 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அலர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்கிறது
இதனிடையே, மழையின் தாக்கம் தலைநகர் பெங்களூரில் எதிரொலித்து வருகிறது. லேசானது முதல் மிதமானதுவரை சில நேரங்களில் மழை பெய்கிறது. சில நேரங்களில் கனமழையும் பெங்களூரில் கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்றுமுன்தினம் பெங்களூரில், பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை 22.7 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு இருந்தது. அன்றைய தினம் 11.4 மீட்டர் மழை பெங்களூரில் பதிவானது.
குறைந்த வெப்பம்
2016 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பெங்களூரில் பகல் நேர வெப்பநிலை 19.6 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு பதிவானது வர்தா புயல் காரணமாக இவ்வாறு கடும் குளிர் அப்போது பெங்களூரில் நிலவியது. இதன் பிறகு நேற்று முன்தினம்தான் பெங்களூரில் பகல் நேர வெப்பநிலை இருந்த அளவுக்கு குறைவாக பதிவாகியுள்ளது.
கடும் குளிர்
இத்தனைக்கும் டிசம்பர் மாதம் குளிர் காலம். அப்போது மழையும் சேர்ந்து கொண்டதால் அந்த அளவுக்கு குளிர் இருந்தது. ஆனால் இப்போது செப்டம்பர் மாதத்திலேயே கடுமையான குளிர் நிலவுகிறது. வீட்டுக்குள் தரையில் கால் வைக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் மக்கள்.
நீலகிரி நிலவரம்
நேற்று மற்றும் இன்றும்கூட, குளிர் மற்றும் மழை பெங்களூரு நகரில் தொடர்ந்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை மற்றும் குளிர் தட்பவெப்பம் நிலவிவருகிறது. நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடுமையான குளிரில் அவதிப்பட்டு வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.