நாட்டையே உலுக்கிய பெங்களூர் கலவரம்.. பின்னணியில் நடந்தது என்ன.. என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை
பெங்களூர்: பெங்களூர் கலவரத்தின் பின்னணி என்ன என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) தனது 667 பக்க குற்றப் பத்திரிக்கையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி இரவோடு இரவாக நடந்த கலவரத்தை பெங்களூர் மறக்க முடியாது. டிஜே ஹள்ளி என்ற கிழக்கு பெங்களூர் பகுதியில்தான் இந்த வன்முறை வெடித்தது.
தமிழர்கள் மற்றும் உருது பேசும் முஸ்லீம்கள் கணிசமாக வசிக்கக் கூடிய இந்த பகுதியில்தான், புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி வீடு இருக்கிறது. சம்பவத்தன்று இரவு நூற்றுக் கணக்கானோர் எம்எல்ஏ வீட்டை சூழ்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
பேஸ்புக் பதிவு
2அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவுக்காரர் தனது பேஸ்புக் பதிவில் முஸ்லீம்கள் தொடர்பாக வெளியிட்ட ஆட்சேபகரமான கருத்துதான் இந்த கொந்தளிப்புக்கு காரணம். அவர் இவ்வாறு போஸ்ட் போடுவது முதல் முறை கிடையாது. பல முறை இப்படி நடந்து கொண்டுள்ளார். ஆனால் எம்எல்ஏ இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபம்.
திடீரென வன்முறை
சிலர் எம்எல்ஏ வீட்டுக்கு அருகே போராட்டம் நடத்திய நிலையில் சிலர் டிஜே ஹள்ளி காவல் நிலையம் சென்று இந்த பேஸ்புக் பதிவு தொடர்பாக புகார் அளித்தனர். ஆனால் அப்போது திடீரென நிலைமை தலைகீழாக மாறியது. எம்எல்ஏ வீடு மீது சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. உச்சகட்டமாக டிஜே ஹள்ளி காவல் நிலையத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன.
பதிலடி
இதனால் போலீஸ் பதிலடி ஆரம்பித்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இரவு முழுக்க இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. கடந்த வாரம் 667 பக்க குற்றப் பத்திரிக்கையை என்ஐஏ நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதில் இந்த தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்கள்
247 பேர் மீது குற்றப் பத்திரிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் திடீரென கலவரத்தை தூண்டியுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டதற்கான போட்டோ, வீடியோ, அவர்கள் செய்த சாட்டிங் போன்ற அனைத்து டிஜிட்டல் தகவல்களும் குற்றப் பத்திரிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவினர் அமைதியாக போராட்டம் நடத்த விரும்பியுள்ளனர். ஆனால் சிலர் ஒன்று சேர்ந்து வன்முறையை தொடங்கிவிட்டனர். நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். இவ்வாறு கூறியுள்ளது என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை.