600 கோடி சொத்துக்கு அதிபதி.. பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட பெங்களூரின் 'பணக்கார' ரவுடி
பெங்களூர்: பெங்களூரின் 'பணக்கார ரவுடி' என்று பெயரெடுத்த லட்சுமணா (42), பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூர் அடுத்த தும்கூர் மாவட்டத்தின் குனிகல் தாலுகாவை சேர்ந்தவர் லட்சுமணா. இவரது அண்ணன் ராமா. இருவரும் பெங்களூருக்கு 1990களில் காலடி எடுத்து வைத்தனர். இதன்பிறகு படிப்படியாக ரவுடியிசத்தை முழு நேர தொழிலாக மாற்றினர்.
1995ல் இந்த சகோதரர்கள் பெங்களூரில் பெயர் பெற்ற ரவுடிகளாகவும் மாறினர்.
சாதா திருடன் தெரியும்.. 'ஸ்பைடர்மேன்' திருடன் பத்தி உங்களுக்குத் தெரியுமா? " /> சாதா திருடன் தெரியும்.. 'ஸ்பைடர்மேன்' திருடன் பத்தி உங்களுக்குத் தெரியுமா?
அண்ணன், தம்பி
ராமா, லட்சுமணா ஆகிய இவ்விருவர் மீதும், பெங்களூர் நகரின் பல்வேறு காவல் நிலையங்களில், கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியிசத்திற்கு பெயர் பெற்ற மாகடி ரோடு, காமாட்சிபாளையா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள லோக்கல் ரவுடிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட லட்சுமணா, நகரின், முக்கியமான பகுதிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு அவர்களிடமிருந்து எழுதி வாங்கி, பில்டர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து கொழுத்த லாபம் சம்பாதித்து வந்துள்ளார்.
600 கோடி சொத்து
இப்படியாக சுமார் 600 கோடி ரூபாய்க்கு லட்சுமணாவின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. எனவேதான், இவரை பெங்களூரின் பணக்கார ரவுடி என்கிறது காவல்துறை தரப்பு. ரவுடியிசத்தில் பெரியாளானதும், பாதுகாப்புக்காக அரசியலில் தஞ்சம் அடைவோரின் பட்டியலில் இவரும் விதிவிலக்கில்லை. 2018ல் பாஜகவில் சேர்ந்தார். அந்த கட்சி ஆட்சியை பிடிக்க முடியாததால், ஆளும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு ஜம்ப் செய்தார்.
சிறையில் அடைப்பு
இந்த நிலையில், பெங்களூர் நகர கூடுதல் கமிஷனராக (குற்றப்பிரிவு), அலோக் குமார் பதவியேற்ற பிறகு, ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரமடைந்தது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி மாதம், லட்சுமணா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட லட்சுமணா, கடந்த மாதம் 22ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று மதியம், தனது நண்பர்கள் சிலரை சந்தித்துவிட்டு, எஸ்யூவி வகை காரை ஓட்டியபடி, ராஜாஜிநகர் சார்ட் சாலையில் சென்றுள்ளார்.
கார் வழிமறிப்பு
அப்போது, 5 பேர் கொண்ட எதிரி கும்பல், இவர் காரை தாக்கி வழிமறித்து, லட்சுமணாவை கொல்ல முயன்றது. அவர்களிடமிருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டிச் சென்றார் லட்சுமணா. இருப்பினும், மகாலட்சுமி லேஅவுட் அருகே அந்த கார் சென்றபோது, கொலை கும்பல், இந்த காரை மறித்து நிறுத்தி விட்டது. லட்சுமணா சுதாரிப்பதற்குள், எதிரி கும்பல், மிளகாய் பொடியை கண்ணில் தூவி, காரிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக லட்சுமணாவை வெட்டியுள்ளது. பகல் 12 மணிக்கு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. இருப்பினும், பொதுமக்களில் யாரும் தடுக்க முற்படவில்லை. இதுபற்றி போலீசாருக்கு சிலர் தகவல் கொடுத்துள்ளனர்.
விசாரணை
மகாலட்சுமி லேஅவுட் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொலை கும்பல் தப்பியோடிவிட்டது. எம்எஸ் ராமையா மருத்துவமனைக்கு, லட்சுமணாவை கொண்டுச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனிடையே சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.