தகவல் தொழில்நுட்ப பலனை அறுவடை செய்யும் இடத்தில் இந்தியா இருக்கிறது- பெங்களூர் மாநாட்டில் மோடி பேச்சு
பெங்களூர்: 'டிஜிட்டல் இந்தியா', நாட்டு மக்களின் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்று அழைக்கப்படுவது பெங்களூர். இங்கு ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டு 23வது தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று துவங்கியது. இந்த மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள், ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும், பல்வேறு நாடுகளில் இருந்து இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பது சிறப்பம்சமாகும்.
கொரோனா நோய் பாதிப்பு காரணமாக இந்த வருடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது: டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான சிறந்த கட்டமைப்பு மற்றும் சந்தை வசதியை இந்தியா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அனைத்து திட்டங்களிலும் தொழில்நுட்பம் என்பது ஒரு அடிப்படை விஷயமாக மாற்றப்பட்டுள்ளது. "டெக்னாலஜி முதலில்" என்பதுதான் இந்த அரசின் குறிக்கோள்.
தற்போது தகவல் தொழில்நுட்ப யுகத்தின் நடுப்பகுதியில் நாம் இருக்கிறோம். முதலில் யார் செல்கிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது தான் முக்கியம்.
பெரம்பலூர் ஏழை மாணவியின் மருத்துவர் கனவை நனவாக்கிய கமல்.. ரூ. 5 லட்சம் நிதியுதவி
டிஜிட்டல் இந்தியா என்பது மக்களின் வாழ்வியல் நடைமுறையாக மாறிப்போய்விட்டது. பீம் யூபிஐ போன்றவை இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சைபர் பாதுகாப்பு விஷயத்தில் இந்திய இளைஞர்கள் முக்கிய பங்காற்ற முடியும். இளைஞர்களுக்கான வாய்ப்பு மிகப்பெரியதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தின், பலன் அனைத்தையும் அறுவடை செய்யக் கூடிய நல்ல இடத்தில் இந்தியா அமர்ந்து கொண்டு இருக்கிறது. மிகப்பெரிய சந்தை மற்றும் அற்புதமான மூளை திறன் கொண்டது இந்தியா.
நமது உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உலக நிறுவனங்களுடன் போட்டி போடக் கூடிய திறமை கொண்டவை. தகவல் தொழில் நுட்பத்தின் மூலமாக மனிதர்களின் மாண்பு காக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலமாக பல மில்லியன் விவசாயிகள் தங்களுக்கான நிதி உதவியை பெற முடிகிறது. கொரோனா நோய் காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம்தான் ஒவ்வொரு ஏழை மக்களையும் எளிதாக சென்று சேர்வதற்கான வழிமுறையாக மாறிவிட்டது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.