காரை ஸ்டார்ட் பண்ணும்போது இப்படி நடக்குமா.. யோசித்து பார்க்க முடியாத விபத்து.. பெங்களூரில் பெண் பலி
பெங்களூர்: காரை ஸ்டார்ட் செய்யும்போது, இப்படியும் மரணம் நிகழுமா என்று வியக்க வைக்கும்படி ஒரு மோசமான சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் அதி வேகமாக செல்லும்போது வாகனங்கள் விபத்தில் சிக்குவது சில நேரங்களில் நடக்க கூடியது. சில நேரங்களில் டயர்கள் வெடிப்பதால் விபத்துகள் ஏற்படுவதை பார்த்துள்ளோம்.
ஆனால், பெங்களூரில் காரை ஸ்டார்ட் செய்யும்போது யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு விபத்து நேர்ந்துள்ளது.
சாப்ட்வேர் இன்ஜினியர் மனைவி
பெங்களூரின் வசதிபடைந்த ஏரியாக்களில் ஒன்று சதாசிவநகர். அங்கே வசித்தவர் நந்தினி ராவ் (48). இவரது கணவர் ராஜேஷ் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று நந்தினி தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட ஹோண்டா சிட்டி காரை எடுத்துக் கொண்டு வெளியே எங்கோ கிளம்ப சென்றுள்ளார்.
சீட்டில் உட்காரவில்லை
அப்போதுதான், நந்தினி ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார்.. அவர் சீட்டில் முழுமையாக உட்கார்ந்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்யாமல், ஒரு காலை காருக்கு உள்ளே வைத்தபடி காரை ஸ்டார்ட் செய்துவிட்டார். ஆனால் அந்த கார் ஹேண்ட் பிரேக் போடப்படாமல் ரிவர்ஸ் கியரில் நிறுத்தப்பட்டிருந்திருந்ததால், பின்நோக்கி நகர ஆரம்பித்தது.
மரத்தில் மோதியது
கார் கதவு திறந்திருந்த நிலையில், கார் திடீரென ஒரு 'புஷ்ஷுடன்' பின்நோக்கி நகர்ந்ததால் கதவு டமார் என்று நந்தினி மீது வந்து அமுக்கியது. அவர் கார் கதவை திறப்பதா, பிரேக்கை பிடிக்க உள்ளே நுழைவதா என்று யோசிப்பதற்குள் பின்னால் இருந்த மரத்தில் சென்று கார் மோதிவிட்டது. பலத்த அடிபட்ட நந்தினி அங்கேயே மயங்கி விழுந்தார்.
ஐயோ பாவம் நந்தினி
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், இதை பார்த்து யஷ்வந்தபுரா பகுதியிலுள்ள கொலம்பியா ஏசியா மருத்துவமனைக்கு நந்தினியை தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இப்படியும் நடக்குமா என்ற ரீதியில் இந்த விபத்து நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு டிப்ஸ்
யாராக இருந்தாலும், காரை நிறுத்தும்போது ஹேண்ட் பிரேக்கை போட்டுவிட்டு செல்ல வேண்டும், காருக்குள் முழுமையாக ஏறி உட்கார்ந்த பிறகே ஸ்டார்ட் செய்ய வேண்டுமே தவிர சிலர், ஸ்கூட்டர்களை ஆன் செய்வது போல நின்றபடி ஆன் செய்யக் கூடாது, காருக்குள் ஏறி உட்கார்ந்து கதவை சாத்தியபிறகே ஆன் செய்ய வேண்டும், அதிலும் குறிப்பாக, கியரை நியூட்ரலுக்கு கொண்டு வந்த பிறகுதான் ஹேண்ட் பிரேக் போட்டபடி வாகனத்தை ஆன் செய்ய வேண்டும், காரை கிளப்பும் முன்பாக, முன்பக்கமும், பின்பக்கமும் பார்த்துக் கொண்டு யாரும் வரவில்லை என்ற பிறகுதான் கிளம்ப வேண்டும், காரை விட்டு கீழே இறங்கும்போது ஆப் செய்துவிட்டு, ஏதாவது ஒரு கியரை போட்டுவிட்டு மறக்காமல் ஹேண்ட் பிரேக் போட்டு வைக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காது என்கிறார்கள், வல்லுநர்கள்.