ஆதிசங்கரர் சிலை மீது கிடந்த துணி.. பெரும் போராட்டத்தில் குதித்த பாஜக.. அப்புறம் பார்த்தால்.. கப்சிப்
பெங்களூர்: ஆதி சங்கராச்சாரியார் சிலை மீது போடப்பட்ட ஒரு துணி விவகாரத்தை முன்வைத்து பாஜக எம்எல்ஏ போராட்டத்தில் குதித்ததும், அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில், இதற்கும் பாஜகவினர் குற்றம்சாட்டியதை போல, இஸ்லாமிய அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்ததும் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீருங்கேரி சாரதா பீடம் இந்துக்கள் மத்தியில் பிரபலமானது. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து மத ஞானி ஆதிசங்கராச்சாரியார், சாரதா பீடத்தை நிறுவினார்.
இங்குதான், ஒரு துணியால், கிட்டத்தட்ட ஒரு கலவரமே நடக்கவிருந்தது. நல்லவேளையாக அது நடக்கவில்லை.
பேட்டரியில் விடுதலைப் போராட்ட வீரர்கள்...அசத்திய கோயம்புத்தூர் கலைஞர்!!
ஆதிசங்கரர் சிலை
சிக்மங்களூர் உள்ளிட்ட அந்த பிராந்தியத்தில் உள்ள கர்நாடக மாவட்டங்களில் இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையேயான மோதல் போக்கு கலவரங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இப்படியான ஒரு நிலையில்தான் ஸ்ரீருங்கேரி நகரில் சாலை அருகே, அமைக்கப்பட்டுள்ள ஆதிசங்கராச்சாரியார் சிலை மீதான விதானத்தின் மீது ஒரு துணி கிடந்துள்ளது. அது பச்சை மற்றும் நீல வண்ணத்தில் காணப்பட்டது. இதுதான் விஷயம். அதற்குள்ளாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் பெரிய சதியே இருப்பதாக வீதிகளுக்கு வரத் தொடங்கினர்.
பாஜக போராட்டம்
இந்த தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஜீவராஜ் தலைமையில் போராட்டத்தில் குதித்து விட்டனர் பாஜகவினர். எஸ்டிபிஐ கட்சியின் கொடிதான் இது என்றும், வேண்டுமென்றே ஆதிசங்கராச்சாரியாரை அவமதிக்கும் நோக்கத்தில் இந்த கொடி போர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
எஸ்டிபிஐ கட்சிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
பெங்களூர் வன்முறை
சில தினங்களுக்கு முன்புதான் பெங்களூரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேஸ்புக்கில் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி உறவினர் பேஸ்புக்கில் பதிவு வெளியிட.. அதற்கு பதிலடியாக எம்எல்ஏ வீடு சூறையாடப்பட்டது. எனவே, சிக்மகளூரில், மத ரீதியான மோதல் போக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். உடனடியாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகள்
அப்போது தான் ஒரு விஷயம் தெரியவந்தது. மனோகர் என்பவரின் மகன் மிலிந்த் என்ற 28 வயது வாலிபர் சம்பவத்தன்று இரவு அந்த வழியாகச் சென்று உள்ளார். அப்போது மழை மற்றும் குளிர் நிலவியதால் தன் உடலில் எதையாவது போர்த்திக் கொள்ள வேண்டுமே என்று சுற்றி முற்றி பார்த்தவருக்கு அங்கு முஸ்லீம் பண்டிகையையொட்டி அச்சடிக்கப்பட்ட ஒரு பேனர் துணி கிடந்தததை கவனித்தார். அதை எடுத்து தனது உடலை சுற்றி போர்த்திக் கொண்டார். பிறகு அந்த பக்கமாக வீசி விட்டுச் சென்றுள்ளார். அது, சங்கராச்சாரியார் சிலை மேலே உள்ள கட்டிட பகுதிக்கு மேலே, சென்று ஒட்டிக்கொண்டு இருந்துள்ளது.
பாஜக கப்சிப்
சிசிடிவி வீடியோ காட்சிகளில் இது தெளிவாக பதிவாகியுள்ளது. அவர் எஸ்டிபிஐ அல்லது வேறு எந்த ஒரு கட்சியையும் சேர்ந்தவர் கிடையாது. குடி போதை ஆசாமி என்பதும், சில சில திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அதற்குள்ளாக, பாஜகவை சேர்ந்த எம்பி ஷோபா கரண்ந்தலாஜே, தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்டிபிஐ கட்சி, ஸ்ரீ சங்கராச்சாரியாரின் சிலை மீது கொடியை போர்த்தி வன்முறைக்கு வழி வகுத்துள்ளது. இந்த தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும். இவர்கள் மனித குலத்துக்கு எதிரானவர்கள். தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள், என்றெல்லாம் சரமாரியாக ட்வீட் செய்து இருந்தார். ஆனால் ஒரு குடிகாரர் வீசிச் சென்ற துணிதான் அது, என்பது தெரியவந்ததும் கப்சிப் என்று பாஜக தலைவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டனர்.