காவி துண்டுடன்.. கர்நாடக முதல்வராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை.. அமைச்சர்கள் பதவியேற்கவில்லை!
பெங்களூர்: கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் ஹெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
கர்நாடக முதல்வராக கடந்த இரண்டு வருடங்களாக பதவி வகித்துவரும் எடியூரப்பா வயது மூப்பு காரணமாக அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
குடி போதையில் தாறுமாறாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்... இளைஞர்கள் படுகாயம் - 4 பேர் கைது
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவரது அமைச்சரவை கலைந்தது.
எம்எல்ஏக்கள் குழு கூட்டம்
இந்த நிலையில்தான் புதிய சட்டசபை குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மேற்பார்வையாளராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.
எடியூரப்பாவால் முன்மொழியப்பட்டார்
இந்த கூட்டத்தின்போது எடியூரப்பா அரசில் மூத்த அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை பெயரை புதிய சட்ட சபை குழுத் தலைவராக எடியூரப்பா முன்மொழிந்தார். அமைச்சர் கோவிந்த் கார்ஜோல் இதை வழிமொழிந்தார். இதை அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். வேறு எந்த ஒரு பெயரும் பரிசீலனைக்கு வரவில்லை.
இன்று காலை முதல்வர் பதவியேற்பு
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு ராஜ் பவனில் நடைபெற்ற எளிமையான பதவி ஏற்பு விழாவில் பசவராஜ் பொம்மை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆளுநர் தாவர்சந்த் ஹெலாட் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இன்று முதல்வர் மட்டும் பதவி ஏற்றார். மூன்று துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. ராஜ்பவனில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மட்டுமே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர். பசவராஜ் பொம்மை பதவியேற்றபோது அவர்கள், பாரத் மாதா கி ஜே.. என்று கோஷங்களை எழுப்பினர். பசவராஜ் பொம்மை தனது கழுத்தில் காவி நிற துண்டு அணிந்திருந்தார். பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், சீனியர் அமைச்சரவை சகாக்களும் கலந்து கொண்டனர்.
எடியூரப்பாவுக்கு நெருக்கம்
பசவராஜ் பொம்மை எடியூரப்பா போலவே லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஹாவேரி மாவட்டம் இவரது சொந்த ஊர் ஆகும். எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர் பசவராஜ் பொம்மை. எடியூரப்பா முதன் முதலில் ஆட்சிக்கு வந்த காலகட்டத்திலேயே நீர் வளத்துறை அமைச்சராக இருந்தவர் பசவராஜ் பொம்மை. தற்போதும் அவர் உள்துறை, சட்டத்துறை என முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தார். சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், எடியூரப்பா காலை தொட்டு கும்பிட்டு ஆசி வாங்கினார் பசவராஜ் பொம்மை.
பசவராஜ் பொம்மை
1960 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தவர் பசவராஜ் பொம்மை. 2008ஆம் ஆண்டு தான் பாஜகவில் சேர்ந்தார்.இப்போது பசவராஜ் பொம்மைக்கு வயது 61. இன்ஜினியரிங் படித்த பசவராஜ் பொம்மை, கர்நாடகாவில் முன்னாள் முதல்வராக இருந்த எஸ்.ஆர்.பொம்மையின் மகன். எஸ்.ஆர்.பொம்மை, மத்தியிலும் அமைச்சராக இருந்தவர். எனவே பாரம்பரியமாகவே நிர்வாக அனுபவம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர்தான் பசவராஜ் பொம்மை.