1979க்கு பிறகு.. ஈரான் பாதுகாப்பு அமைச்சர் வருகை.. மறுபக்கம் அமெரிக்கா.. பெங்களூர் மீது மொத்த கவனம்!
பெங்களூர்: ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி பெங்களூரில் இன்று துவங்குகிறது. ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி 13வது வருடமாக இங்கு நடப்பதில் பல சிறப்பம்சங்களும் உள்ளன.
ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியின் 13வது எடிஷன் இதுவாகும். பெங்களூரின் வடக்கு புற நகர் பகுதியான யலஹங்கா என்ற இடத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில்தான் ஒவ்வொரு ஆண்டும் விமான கண்காட்சி நடக்கும். இந்த ஆண்டும் அங்குதான் நடைபெறுகிறது.
'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு கண்காட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆசியாவின் பெரிய கண்காட்சி
ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி கண்காட்சி என்று அழைக்கப்படும் ஏரோ இந்தியா பிப்ரவரி 3 முதல் 5ம் தேதிவரை பெங்களூரில் நடைபெறுகிறது. ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஏற்பாடு செய்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஏற்றுமதி தொகுப்பை வெளியிடுவார்.
ஹெச்ஏஎல் நிறுவனம்
83 தேஜாஸ் இலகுரக போர் விமானங்களை அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்வதற்கான 48,000 கோடி டாலர் ஒப்பந்தத்தில் அரசுஇன்று, கையெழுத்திடும். இது இதுவரை இல்லாத அளவுக்கு உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதல் திட்டமாக இருக்கும்
விமான கொள்முதல்
பெங்களூருவில் நடைபெறும் 'ஏரோ இந்தியா' விண்வெளி கண்காட்சியில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் எச்.ஏ.எல் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். பிப்ரவரி 5ம் தேதி வரை மூன்று நாள் இந்த நிகழ்வு நடைபெறும், இதில் கலந்துகொள்ள COVID-19 RT-PCR சோதனை அறிக்கை அவசியமாகும். ஜனவரி 31, காலை 9 அல்லது அதற்குப் பிறகு டெஸ்ட் எடுக்கப்பட்டிருப்பது அவசியம்.
பார்வையாளர்கள்
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த முறை ஒவ்வொரு நாளும் 3,000 பார்வையாளர்கள் மட்டுமே விமானக் காட்சி இடத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
ஈரான் அமைச்சர்
523 இந்திய மற்றும் 78 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 601 கண்காட்சியாளர்கள் பங்கேற்கிறார்கள், ஈரான் பாதுகாப்பு அமைச்சரும் பெங்களூர் வருகை தருகிறார். 1979ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தனியாக இந்தியா வருவது இதுதான் முதல் முறை. ஈரான் மற்றும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர்கள் முதல், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த முக்கிய ஆயுத உற்பத்தியாளர்கள் வரை, இந்த விமானக் காட்சியில் பங்கேற்கிறார்கள் என்பதால் உலகம் முழுக்க இது கவனம் ஈர்த்துள்ளது. ஏனெனில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் ஆகாது. ரஷ்யாவுக்கும்-உக்ரைனுக்கும் மோதல்.