ஒரே அபார்ட்மென்ட்டில் இருவருக்கு உருமாறிய கொரோனா, அபார்ட்மென்ட்டிற்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் வசிக்கும் இருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த அபார்ட்மென்ட் முழுவதுமாக மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டில் கடந்த வாரம் புதிய வகை கொரோனாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த உருமாறிய கொரோனா, மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவு என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாகப் பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்திற்குக் கடந்த வாரம் இந்தியா தடை விதித்தது. இருப்பினும், தடை உத்தரவிற்கு முன், கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை சுமார் 33 ஆயிரம் பேர் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.
20 பேருக்கு உருமாறிய கொரோனா
அவர்களில் யாரேனும் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த ஆய்வும் புனேவிலுள்ள தேசிய வைராலஜி மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்றின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் மட்டும் ஒன்பது பேருக்கு இதுவரை உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பிரிட்டன் நாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
அபார்ட்மென்ட்டிற்கு சீல்
இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் தாய்-மகள் என இருவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பிய இருவரும் தற்போது சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அபார்ட்மென்டிற்கும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
சீல் வைக்கவில்லை
இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், "ஒரே அபார்ட்மென்டில் இருக்கும் தாயிக்கும் அவரது மகளுக்கும் உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த அபார்ட்மென்ட் தற்போது மூடப்பட்டுள்ளது. ஆனால், அதற்காகச் சீல் வைத்துவிட்டோம் என்று கூற முடியாது, மத்திய அரசின் வழிகாட்டுதல்களையே நாங்கள் பின்பற்றுகிறோம்.
தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்
இந்த உருமாறிய வைரஸ் மிக வேகமாகப் பரவும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தில் உள்ள மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று கூறினார்.
முதல்வர் கோரிக்கை
முன்னதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கடந்த இரண்டு மாதங்களில் பிரிட்டன் நாட்டிலிருந்து திரும்பிய அனைவரும் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போதுதான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் சுற்றியிருப்பவர்களின் நலனிற்காக இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.