பெங்களூருவில் கள்ளச் சந்தையில் கொரோனா படுக்கைகள் விற்கப்பட்டது எப்படி? ஒரே நாளில் மூன்று பேர் கைது
பெங்களூரு: கொரோனா படுக்கைகளைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று மட்டும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.
இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா படுக்கைகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக அம்மாநிலத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று சஷிதர், வெங்கோபா ராவ், மற்றும் சுதிர் உமா ராணி என மூவரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பெங்களூருவில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருபவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
மும்பையில் கோவாக்சினுக்கு பற்றாக்குறை.. 2ஆம் டோஸை எடுத்துக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி
பொதுவாக பெங்களூரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் உயிரிழந்த பின்னரும் காலியாகும் படுக்கைகள் குறித்த தகவல்கள் வார் ரூமிற்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், இவர்கள் மூவரும் அந்தத் தரவைகளை அனுப்பவில்லை. மாறாக அத்தகைய படுக்கைகளையே இவர்கள் மற்ற நோயாளிகளுக்குச் சட்டவிரோதமாக விற்றுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் ஏழு பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.