தயவு செய்து மீண்டும் வேலைக்கு வாங்க.. பெங்களூரு மருத்துவர் உருக்கமான வேண்டுகோள்
பெங்களூரு: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் உடனே முன் வர வேண்டும் என்று பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் தாஹா மாத்தீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள எச்பிஎஸ் என்ற தனியார் மருத்துவமனை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கு இல்லை. இதனால் குவிந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் தவித்து வருகிறது.
சொன்னார்.. சொன்னபடி குறைந்தது.. சபாஷ் டாக்டர் ராதாகிருஷ்ணன்.. ஒரே நாளில் 3793 பேர் டிஸ்சார்ஜ்!
44 மருத்துவர்கள்
சமீபத்தில் வரை 20 செவிலியர்கள் மற்றும் 44 மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் இருந்துள்ளனர். ஆனால் தற்போது ஐந்து மருத்துவர்கள் மற்றும் 12 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். சிவாஜ்நகர் எச்.பி.எஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் தாஹா மாத்தீன் மருத்துவர்கள் உடனே வந்து மீண்டும் வேலைக்கு சேருமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெட் கிடைப்பது சவால்
அந்த வீடியோவில் அவர் கூறுகையில், "நான் எச்.பி.எஸ் மருத்துவமனையின் கோவிட் வார்டின் ஐசியூவில் இருந்து பேசுகிறேன். நான் காலை 7.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தேன். தற்போது நள்ளிரவு ஆகிவிட்டது. இப்போது வரை எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. என் அப்பாவுக்கு மூச்சுவிட முடியவில்லை. என் அம்மாவால் மூச்சுவிட முடியவில்லை. என் அண்ணனால் மூச்சுவிட முடியவில்லை என்று என்னை அழைத்தபடி இருக்கிறார்கள். ஏனெனில் பெங்களூருவில் கொரோனா சிகிச்சைக்கு பெட் கிடைப்பது சவாலாக உள்ளது.
மருத்துவர்கள் இல்லை
ஆனால் இங்கே பாருங்கள். என்னுடன் டாக்டர் சிவா இருக்கிறார். எங்களுடன் ஐந்து பேர் தான் வேலை செய்கிறார்கள். எங்கள் மருத்துவமனையில் மற்ற மருத்துவர்கள் வேலை செய்ய விரும்பவில்லை. எங்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி, பெட்கள், வெண்டிலேட்டர்கள். 30 பெட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என எல்லாமே இருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. நான் எனது வாட்ஸ் அப் நம்பரை வெளியிட்டுள்ளேன்.
முன்வரிசை வீரர்கள்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனே தேவை. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து பணியாற்ற வாருங்கள். ஒரு சமயம் ராணுவத்தினர் மக்களை காக்கும் போரில் முன்வரிசை வீரர்களாக இருந்தாரகள் ஒரு சமயம் தீயணைப்பு வீரர்கள் முன்வரிசை வீரர்களாக இருந்தார்கள். ஒரு சமயம் போலீசார் முன்வரிசையில் இருந்தார்கள். அந்த வகையில் தற்போது மருத்துவர்களாகிய நாம் முன்வரிசை போர் வீரர்களாக உள்ளோம்.
மக்களை காக்க வாருங்கள்
மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்கள் உங்களின் அப்பாவாக, சகோதரானா, அம்மாவாக, சகோதரியாக, உங்கள் உறவினர்களாக நினைத்து வாருங்கள். தயவு செய்து வாருங்கள், நாம் மக்களை காக்கலாம். தொடர்புக்கு டாக்டர் சித்திக் வாட்ஸ் அப் நம்பர், 9986024862." இவ்வாறு கூறியுள்ளார்.