நாட்டிலேயே அதிக சம்பளம் கிடைக்கும் நகரம் பெங்களூர்.. ஹார்டுவேர் துறை காரணம்! சென்னைக்கு எந்த இடம்?
Recommended Video
பெங்களூர்: நாட்டிலேயே, ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் நகரம் பெங்களூர்தான் என்கிறது, லிங்கெட்இன் (LinkedIn) நிறுவனம் நடத்திய ஆய்வு.
பணியாளர்களுக்கான சோஷியல் மீடியாவாக செயல்படுவது லிங்கெட்இன் நிறுவனம். முதல் முறையாக, தங்களது தளத்தில் பதிவிடப்பட்ட சம்பளங்களை அடிப்படையாக கொண்டு இப்படியான ஒரு ஆய்வை நடத்தியுள்ளது லிங்கெட்இன்.
லிங்கெட்இன் தளத்தில் பதிவேற்றப்பட்ட ஊழியர்களின் சம்பள அடிப்படையில் இந்த ரிசல்ட் வந்துள்ளது.
துறைவாரியாக எடுத்துக்கொண்டால், ஹார்டுவேர் & நெட்வொர்க்கிங் பணிகளுக்கு, அதிகபட்ச சம்பளம் கிடைக்கிறதாம். இந்த துறையில் உள்ளவர்கள், சராசரியாக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள். சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.12 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.
ஹார்டுவேர் துறையில் உள்ளோருக்கு வழக்கமாக இவ்வளவு அதிக ஊதியம் கிடைத்தது இல்லைதான். ஆனால், சிப் டிசைன் உள்ளிட்ட நவீன காலத் தேவைகள் தொடர்பான ஹார்டுவேர் துறையில் வழங்கப்படும் அதிகபட்ச ஊதியம், இப்போது அந்த டிரெண்ட்டை மாற்றியுள்ளது. 'சினோப்சிஸ் இந்தியா' என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை தலைவர் சிவானந்தா கோடீஷ்வர் இதுபற்றி கூறுகையில், நிறைய சிப் டிசைன் உற்பத்தி பிரிவுகள் இந்தியாவிற்கு வந்துள்ளன. 2 வருடங்கள் முன்பு இருந்த டிரெண்ட்டைவிட இப்போது சம்பள உயர்வு மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்றார்.
சாப்ட்வேர் மற்றும் ஐடி சேவைகள் துறையில் இருப்போருக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.12,05,341 ஊதியமாக கிடைக்கிறதாம். புதிய டிஜிட்டல் டெக்னாலஜிகள் வருகை இத்துறை சம்பளத்தை உயர்வடையச் செய்துள்ளது. புரோக்ராமிங் மட்டுமின்றி, டொமைன் ஞானம் பெற்ற இந்த துறை வல்லுநர்கள் அதிக ஊதியம் பெறுவதாக இந்த துறை சார்ந்த, நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ.9,95,161 ஊதியம் கிடைக்கிறது. ஹிந்துஸ்தான் யுனிலீவர், பி&ஜி மற்றும் பிரிட்டானியா போன்றவை இந்த பிரிவில் வரும். ஹெல்த்கேர் பிரிவில் பணியாற்றுவோருக்கு சராசரியாக ரூ.9,59,789, நிதித்துறையில் பணியாற்றுவோருக்கு ரூ.9,47,339, கார்பொரேட் சேவைகள் பிரிவில் பணியாற்றுவோருக்கு ரூ.9,37,583, கட்டுமானத்துறையில் பணியாற்றுவோருக்கு ரூ.8,30,285 ஊதியமாக கிடைக்கிறது.
உற்பத்தி துறையினருக்கு ரூ.8,14,588, ரியல் எஸ்டேட் துறையினருக்கு ரூ.782,871, மீடியா மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பணியாற்றுவோருக்கு ரூ.7,15,148 சராசரி ஆண்டு சம்பளமாக உள்ளது.
நகரங்கள் அடிப்படையில் பார்த்தால், தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்று அழைக்கப்படும், பெங்களூரில் பணியாற்றுவோரின் ஆண்டு சம்பள சராசரி, ரூ.11,67,337 லட்சமாகும். இரண்டாவது இடத்தை வர்த்தக தலைநகரான மும்பை பெறுகிறது. அங்கு பணியாற்றுவோரின் ஆண்டு சராசரி சம்பளம் ரூ.9,03,929 லட்சமாகும். டெல்லி-என்சிஆர் நகரில் பணியாற்றுவோரின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.8,99,486 லட்சம். வளர்ந்து வரும் ஐடி நகரமான ஹைதராபாத்தில் ஆண்டு சராசரி சம்பளம் ரூ.8,45,574 ஆக உள்ளது. இந்த பட்டியலில் சென்னை நகரம் 5வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் பணியாற்றுவோர் சராசரி சம்பளம் ரூ.6,30,920 என்ற அளவில் உள்ளது.