102 கிமீ நீளம்.. ரூ.25,000 கோடி செலவு.. பெங்களூரில் வருகிறது பிரம்மாண்ட பாலம்!
பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை போக்கும் வகையில் 102 கிலோ மீட்டருக்கு குறுக்கும் நெடுக்குமாக மிக நீளமான பாலம் கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை போக்கும் வகையில் 102 கிலோ மீட்டருக்கு குறுக்கும் நெடுக்குமாக மிக நீளமான பாலம் கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
பெங்களூரின் அதிகாலை பொழுதுகள் பனியும், குளிரும் சேர்ந்து அழகாக இருக்கும். ஆனால் நேரம் செல்ல செல்ல டிராபிக் நெரிசல் எல்லா அழகையும் நாசமாக்கிவிடும்.
பெங்களூரின் மிகப்பெரிய பிரச்சனையே டிராபிக் மட்டும்தான். இதை சரி செய்ய அரசு பல வருடமாக கஷ்டப்பட்டு வருகிறது. ஆனால் டிராபிக் பிரச்சனை சரியான பாடில்லை.
இணைக்கும் வகையில் பாலம்
இந்த நிலையில் பெங்களூரில் பெரிய நீளமான பாலம் கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்து இருக்கிறது. பெங்களூரின் 90 சதவிகித பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. இதை பாலம் என்று சொல்வதை விட, எலிவேட்டட் காரிடார் என்று கூறலாம். இது சாலைக்கு அருகிலேயே உயரமாக வாகனங்கள் செல்லும் வகையில் கட்டப்பட்டு இருக்கும். உதாரணமாக மெட்ரோ பாலங்கள் போல கட்டப்படும். ஏற்கனவே சில்க் போர்ட் பகுதியில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை பெரிய பாலம் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு நீளம்
இந்த பாலத்தின் மொத்த நீளம் 102 கிலோ மீட்டர் ஆகும். இது பெங்களூரில் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட உள்ளது. வரும் ஜனவரியில் இதன் கட்டுமானம் தொடங்க உள்ளது. இப்போது இதற்கான சோதனை வேலைகள் நடந்து வருகிறது. பெங்களூரில் நான்கு திசைகளையும் இந்த பாலம் இணைக்க கூடியது.
செலவு என்ன
இந்த திட்டத்திற்காக மொத்தம் 25,495 கோடி ரூபாய் செலவு செய்ய கர்நாடக மாநில அரசு திட்டமிட்டு இருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் இதுதான் இந்தியாவின் மிக நீளமான பாலமாக இருக்கும். இதற்கான கட்டுமான செலவுகள் மட்டும் 15,299 கோடி ரூபாய் செலவுகள் ஆகும். 90.01 ஏக்கர் நிலம் வாங்கவும் , பணியாளர்கள் சம்பளத்திற்கும் மீதமுள்ள பணம் கொடுக்கப்படும்.
என்ன செய்யும்
இதற்கான சோதனை பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பாலத்தில் இருந்து இடையில் இறங்க வசதியாக 6 இடங்களில் துணை பாலங்கள் அமைக்கப்படும். தெற்கு - வடக்கு, கிழக்கு - மேற்கு, பின் மத்தியப் பெங்களூர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இது உருவாக்கப்பட உள்ளது. ஆனால் எந்தெந்த இடங்கள் என்று இன்னும் உறுதியாகவில்லை.
மரங்கள் எதிர்ப்பு
மொத்தம் 3,716 மரங்கள் இதற்காக இடமாற்றப்பட உள்ளது. இது பெங்களூர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு மக்களிடம் அனுமதி வாங்கவில்லை. இந்த திட்டம் பெரிய சுற்றுசூழல் பாதிப்பை உண்டாக்கும் என்று மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.