அட்டகாசம்.. பெங்களூரில் உருவாக்கப்பட்ட ராட்சச மிதக்கும் தீவு.. சாதனை பட்டியலில் இடம் பிடித்தது!
பெங்களூரில் இருக்கும் செயற்கை தீவு ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் தீவு என்ற பெயரை பெற்று இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் செயற்கை தீவு ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் தீவு என்ற பெயரை பெற்று இருக்கிறது.
பெங்களூரில் எலக்ரானிக் சிட்டி பகுதிக்கு அருகில் இருக்கிறது ஹெப்பகோடி ஏரி, ஒரு காலத்தில் கூவம் நதியை போலத்தான் இது குப்பை மட்டுமே போடப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதேபோல், இதில் முழுக்க முழுக்க களைகள் முளைத்து மிக மோசமாக காட்சி அளித்தது.
இந்த நிலையில் இதை இப்போது சுத்தம் செய்து இருக்கிறார்கள். சுத்தம் செய்ததோடு, இதில் குட்டி தீவு ஒன்றையும் உருவாக்கி உள்ளனர்.
மிதக்கும் தீவு
உலகம் முழுக்க ஏரிகளில் மிதக்கும் தீவுகளை உருவாக்குவது வழக்கம். அதாவது ஏரிகளின் நடுப்பகுதியில் செயற்கையாக மண்ணை வைத்து நடுவில் தீவை உருவாக்குவார்கள். சில தீவுகளை மண் இல்லாமல் மிதக்கும் உபகரணங்கள் கொண்டு உருவாக்குவார்கள். அந்த வகையில் ஹெப்பகோடி ஏரியில் தற்போது மிதக்கும் டியூப்கள் வைத்து பெரிய தீவை உருவாக்கி உள்ளனர்.
எப்படிப்பட்ட தீவு இது
ஹெப்பகோடி ஏரியில் குறுக்கும் நெடுக்கமாக இந்த மிதக்கும் டியூப்கள் வைக்கப்பட்டது. அதன்மேல் செடிகள் வளர்க்கப்பட்டுள்ளது. பின் அந்த செடிகள், அருகாமையில் இருக்கும் டியூப்களுக்கு பரவி இந்த தீவு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது மிதக்கும் டியூப்கள் மூலம் பின்னிப்பிணைந்த செடிகள் இந்த தீவை உருவாக்கி உள்ளது.
எப்படி உருவாக்கினார்கள்
இந்த டியூப்களை மிதக்க வைப்பதற்கு முன் இந்த ஹெப்பகோடி ஏரியை சுத்தம் செய்துள்ளனர். அதன்பின் அதில் 67,000 கனமீட்டர் மணலை கொட்டி தளம் போல அமைத்து இருக்கிறார்கள். அதற்கு மேல்தான் இந்த தீவை உருவாக்கி உள்ளனர். இது எதிர்காலத்தில் சிறிய மரங்கள் நிறைந்த தீவாக மாறும் என்கிறார்கள்.
எவ்வளவு பெரியது
ஹெப்பகோடி ஏரியில் உள்ள இந்த குட்டி செயற்கை தீவுதான் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் தீவு என்ற பெயரை பெற்று இருக்கிறது. இதற்கு தற்போது லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் விருது வழங்கப்பட்டுள்ளது. 35 ஏக்கரில் உள்ள இந்த ஏரியில் 12 ஆயிரம் சதுர அடிக்கு இந்த மிதக்கும் தீவு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பயன் என்ன
இந்த தீவில் இருக்கும் செடிகள், அங்கு இருக்கும் மாசுக்களை உணவாக எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டது. இதனால் இந்த ஏரியின் சுத்தம் எப்போதும் காக்கப்படும். இதனால்தான் இந்த தீவு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். இதேபோல் பெங்களூரின் மற்ற ஏரியிலும் செய்ய இருக்கிறார்கள், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள்.