பெங்களூர் மெட்ரோ ரயில் அத்திப்பள்ளி வரை நீட்டிப்பு.. டிகே சிவக்குமார் குட்நியூஸ்.. தீவிரமாகும் பணி
பெங்களூர்: பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தமிழகம் - கர்நாடகா எல்லையான அத்தப்பள்ளி வரை நீட்டிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையை போல் பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது பெங்களூர் சல்லக்கட்டா முதல் ஓயிட்பீல்டு வரையும், மாதவராவில் இருந்து கனகபுரா ரோடு சில்க் ரோடு வரையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சமீபத்தில் அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி பெங்களூர் ஆர்வி ரோடு முதல் பொம்மச்சந்திரா வரை மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
நீண்டகால கோரிக்கை
இதுதவிர பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை தமிழக - கர்நாடகா எல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஓசூர் - பெங்களூர் இடையே தினமும் பல லட்சம் பேர் பயணித்து வருகின்றனர்.
வேலை நிமித்தமாக அவர்கள் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் இயக்கப்பட்டால் அவர்கள் எளிதாக பயணிக்க முடியும் என்பதால் அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில் இயக்க வேண்டும் என்று தமிழகம், கர்நாடகா மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கர்நாடகா சட்டசபையில் கேள்வி
கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தொடரில் பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சிவண்ணா ஒரு கேள்வி எழுப்பினார். இவர் பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார்.
சட்டசபையில் சிவண்ணா, ‛‛பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை அத்தப்பள்ளி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இது பெங்களூரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்படுமா?'' என்ற கேள்வியை முன்வைத்தார். தற்போது பொம்மசந்திரா வரை இயங்கும் மெட்ரோ ரயிலை அத்திப்பள்ளிக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.
டிகே சிவக்குமார் பதில்
அதற்கு டிகே சிவக்குமார், ‛‛பெங்களூர் மெட்ரோ ரயில் சேவை கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளி வரை நீட்டிப்பு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை நீட்டிப்பு செய்வதுதொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த ஆர்வி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்திடம் டிபிஆர் எனும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கேட்கப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications