பெங்களூர் கலவரத்தின்போது.. இந்துக் கோவிலை காப்பாற்ற.. அரண் போல நின்ற இஸ்லாமியர்கள்!
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று இரவு ஏற்பட்ட வன்முறையின்போது அங்கு இருந்த கோயில் மீது எந்த தாக்குதலும் நடைபெறாமல் இருப்பதற்காக முஸ்லிம் இளைஞர்கள் மனித சங்கலி அமைத்து அரணாக பாதுகாத்தது சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்றுள்ளது.
Recommended Video
இதுகுறித்த செய்தியை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. அதில், ''வன்முறை நடந்த பெங்களூரில் இருக்கும் டிஜெ ஹள்ளி போலீஸ் நிலையம் எல்லைக்குள் இருக்கும் கோயிலை பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்கள் தங்களுக்குள் மனித சங்கலி அமைத்து அரணாக பாதுகாப்பு அளித்தனர்'' என்று பதிவிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நேற்று இரவு நடந்த வன்முறையை அடுத்து டிஜெ ஹள்ளி, காவல் பைசந்திரா ஆகிய இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாசனின் உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒரு மதத்தை தவறாக சித்தரித்து இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து நேற்று இரவு நடந்த வன்முறையில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் இருப்பதற்காக இந்தப் பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் நடந்த வன்முறையில் 60 போலீசார் காயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வன்முறைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினரான நவீனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி வீடு சூறை- வாகனங்கள் தீக்கிரை- துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி
எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீனின் பேஸ்புக் போஸ்ட்தான் காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு மதத்தை அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை அவர் போஸ்ட் செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெங்களூர் புலிகேசி நகரில் இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி வீட்டின் மீதும் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. துவக்கத்தில் இவரது வீட்டுக்கு சிறிய கும்பல் மட்டுமே வந்துள்ளது. பின்னர் அவர்களுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கொண்டனர். இவர்கள் எம்.எல்.ஏ. வீட்டின் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் இறங்கியதை கட்டுபடுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். அப்போதும் கட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் நேற்று இரவு மட்டும் போலீசார் வாகனங்கள் உள்பட 200 முதல் 250 வாகனங்களுக்கு தீவைத்து எரிக்கப்பட்டதாக போலீசார் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தன்னுடைய பேஸ்புக் அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து, தவறான தகவல்களை பதிவு செய்து இருப்பதாக, நவீன் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் நேற்றிரவு, டிஜெ ஹள்ளி பகுதியில் இருக்கும் கோயிலை பாதுகாக்க அந்தப் பகுதி முஸ்லிம் இளைஞர்கள் பாதுகாப்பு அரணாக கைகளை கோர்த்து நின்றனர். இந்த சம்பவம் மக்களிடையேயும், சமூக வலைதளங்களிலும் பாராட்டை குவித்து வருகிறது.