'மேனேஜர் மூஞ்சி இல்லையே உனக்கு'.. மோசடி செய்து ஐடியில் வேலை வாங்கிய இளைஞர்.. சிக்கிய சில்வண்டு!
பெங்களூர்: 'வசூல்ராஜா' பட பாணியில் ஆன்லைன் நேர்முகத் தேர்வில் மோசடி செய்து மென்பொருள் வடிவமைப்பாளர்களாக வேலைக்கு சேர்ந்த 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவர்களுக்கு இந்த மோசடியில் உதவிக்கு செய்த நபர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இதுபோல எத்தனை நபர்களை எந்தெந்த நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர்த்துள்ளார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
3 அடி நீளம்.. 2 அடி உயரம்.. மாலை அல்ல! காலணியை காணிக்கையாக வழங்கும் கிராம மக்கள்.. விசித்திர வழிபாடு
ஆன்லைனில் நேர்முகத்தேர்வு...
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் 'சைமன்ஸ் ஹெல்த்கேர்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கு (Software developers) தேவை ஏற்பட்டது. இதையடுத்து, இதற்கான விளம்பரத்தை வெளியிட்ட அந்நிறுவனம், ஆன்லைன் மூலம் நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் தேர்வானவர்களுக்கு கடந்த மே மாதம் நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
தேர்வில் கலக்கல்; வேலையில் சொதப்பல்
அதன்படி, அந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களில் 5 பேர் தேர்வாகினர். அவர்கள் ஜூன் மாதம் முதலாக பணியில் சேர்ந்தனர். அப்போது அவர்களில் கிரண் குமார் (27), பிரியங்கா பில்லூரி (28) ஆகிய இருவரின் பணியில் மேலதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஆனால் அவர்கள் நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மிக அதிகமாக இருந்தன. இதனால் அவர்களும் போக போக சரியாகிவிடும் என நினைத்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவர்களின் செயல்திறன் மிகவும் கீழ் நோக்கி சென்று கொண்டிருந்தது.
மோசடி செய்தது அம்பலம்
இதனால் சந்தேகமடைந்த உயரதிகாரிகள், அவர்கள் இருவரையும் அழைத்து நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளையும், மேலும் சில அடிப்படையான கேள்விகளையும் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் பதில் தெரியாமல் திருதிருவென முழித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில், அவர்கள் நேர்முகத் தேர்வின் போது செய்த மோசடியை ஒப்புக்கொண்டனர்.
வசூல்ராஜா பட பாணியில்..
அதாவது, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் 'ஆக்டேவியஸ் ஜேஆர்' என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை (வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவனம்) அவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு அணுகியுள்ளனர். அப்போது அங்கு பணிபுரியும் நசிருதீன் (40) என்பவர் 'சைமன்ஸ் ஹெல்த்கேர்' நிறுவனம், மென்பொருள் வடிவமைப்பாளர் பணியிடத்துக்கு ஆட்களை தேர்வு செய்ய விளம்பரம் அளித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அவர்களோ, தங்களுக்கு மென்பொருள் குறித்து ஒன்றும் தெரியாது எனக் கூறியுள்ளனர். அதற்கு நஸ்ருதீன், ஆன்லைன் மூலமாக நேர்முகத்தேர்வு நடப்பதாகவும், அதில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிடலாம் என்றும் கூறியுள்ளார்.
புகுந்து விளையாடினர்..
மேலும், நேர்முகத்தேர்வில் தான் உதவி செய்து வேலை கிடைத்துவிட்டால், தனக்கு தலா ரூ.3 லட்சம் தர வேண்டும் என நஸ்ருதீன் கூறியுள்ளார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். இதையடுத்து, மென்பொருள் வடிமைப்பாளர்களுக்கு பெரிய நிறுவனங்கள் என்னென்ன கேள்விகளை கேட்கும் என்றும், அதற்கான விடைகளையும் நஸ்ருதீன் அவர்களுக்கு வழங்கியுள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட அவர்கள், நேர்முகத் தேர்வில் ஒரு கலக்கு கலக்கியுள்ளனர்.
போலீஸ் தேடுதல் வேட்டை
ஆனால் பணியில் சேர்ந்து வேலை செய்ய தொடங்கியதும் அவர்களின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. இவ்வாறு கூறிய அவர்களை, உடனடியாக அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்தனர். ஆனால் அவர்களோ வேலையை விட்டு சென்றதோடு அவர்கள் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட லேப் டாப்களையும் அபேஸ் செய்து ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மோசடி செய்து பணிக்கு சேர்ந்த கிரண் குமார், பிரியங்கா மற்றும் அவர்களுக்கு உதவி செய்த நஸ்ருதீன் ஆகியோரை பெங்களூரு போலீஸார் தேடி வருகின்றனர்.