காது கேளாத, வாய் பேசாத கிராமப்புற குழந்தைகளுக்கான ஸ்பெஷல் பஸ்!
பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த பி.ஆர். சந்திரசேகர் வாய் பேசாத, காது கேளாதோருக்கான கழகம் ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள வாய் பேசாத, காது கேளாத மக்களுக்காக ஒரு சிறப்பு செயல்முறைப் பேருந்தை அது அறிமுகப்படுத்தியுள்ளது. நடமாடும் ஸ்பீச் அன்ட் ஹியரிங் அவுட்ரீச் பஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பஸ்ஸானது, கிராமப்புறங்களில் உள்ள வாய் பேச முடியாத, காது கேளாத மக்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபடும்.
லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் அமைப்பின் உதவியுடன் இந்த பஸ் திட்டத்தை இவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்து டாக்டர் எஸ்.ஆர்.சந்திரசேகர் கழகத்தின் தலைவர் எம்.எஸ். வெங்கடேஷ்கூறுகையில், இப்படிப்பட்ட பஸ் இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.
ஊரகப் பகுதிகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சிறார்களுக்கு தேவையான வி்ழிப்புணர்வை இது ஏற்படுத்தும். சிறு வயதில் காது கேளாத பிரச்சினை உள்ளதா என்பதை உரிய நேரத்தில் அறிந்து அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த திட்டம் விளக்கும். உரிய வயதில் காது கேளாத பிரச்சினையை கண்டறிந்து விட்டால், உரிய சாதனங்களின் உதவியோடு வாழ்க்கையை இயல்பாக எதிர்கொள்ள நம்மால் முடியும் என்றார் வெங்கடேஷ்.
இந்த பேருந்தில் சவுண்ட் டிரீட்டட் அரை உள்ளது. கிளினிக்கல் ஆடியோ மீட்டர் மற்றும் பிற சாதனங்களும் உள்ளன. புதிதாகப் பிறந்த குழ்ந்தைகளுக்கு செவித்திறன் எப்படி உள்ளது என்பதை கண்டறிய உதவும் சாதனங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு் தேவையான வசதிகளும் இதில் அடங்கியுள்ளன.
மேலும் ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு காது கேட்கும் கருவிகளையும் இந்த திட்டத்தின் மூலம் வழங்கவுள்ளனராம்.
இந்தத் திட்டத்திற்காக இதுவரை ரூ. 1 லட்சம் அளவுக்கு நன்கொடையும், நிதியும் பெறப்பட்டுள்ளது.