நடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்
பெங்களூருவில் மக்களை அச்சுறுத்திய 7 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
பெங்களூரு: நடுராத்திரி.. படு நிசப்தம்.. வெள்ளை துணி.. முழுசும் ரத்தம்.. அப்படியே வந்து ரோட்டில் தூங்கி கொண்டிருந்த மனிதர்களின் கழுத்தை கடித்ததுமே.. அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர் மக்கள்!
பெங்களூரில் கூக்ளி பீடியா என்று ஒரு யூடியூப் சேனல் உள்ளது. இதை சில கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் பிராங்க் ஷோ அதாவது பொதுமக்களை ஏமாற்றி பிறகு குறும்பு செய்யும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.
அதிலும் ஏதாவது வித்தியாசமாக செய்து, மக்களை ஏமாற்ற வேண்டும் என்று யோசித்தனர். இதற்காகவே வெளிநாடுகளில் செய்யப்படும் யூடியூப் வீடியோக்களை பார்த்து பார்த்து, நிறைய டிப்ஸ் எடுத்து வைத்து கொண்டனர். பிறகு ஒரு க்ளூ கிடைத்தது. அதாவது பேய் கெட்-அப் போட்டு மக்களை ஏமாற்றுவது!
பேய் கெட்அப்
இதையடுத்து, பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே ஷெரீப் பகுதியில் நிகழ்ச்சி பிளான் செய்யப்பட்டது. அந்த ரோட்டில் யார் வருகிறார்களோ, அவர்களை பேய் கெட்-அப் போட்டவர்கள் மிரட்டி ஓட வைத்து, அதனை கேமராவில் படம் பிடித்து சேனலில் போடுவது என முடிவெடுத்தனர்.
ரத்தக்கறைகள்
இதற்காக ஒருவர் பேய் கெட்-அப் போட்டுக் கொண்டார். ஒரு வெள்ளை துணி.. முழுசும் உடம்பெல்லாம் போர்த்தப்பட்டிருந்தது.. அதில் ரத்தக்கறைகள் இருப்பது போல செட்டப் செய்து கொண்டனர். கேமராவையும் மறைவாக ஒளித்து வைத்து கொண்டனர். எதிர்பார்த்தபடியே ரோட்டில் வந்து கொண்டிருந்தவர்களின் முன்னாடி திடீரென வந்து நின்று பயமுறுத்தி உள்ளனர்..
ஜாம்பி
இதில் பொதுமக்கள் தலைதெறிக்க பயந்து ஓடியும் உள்ளனர். இதில் என்ன விபரீதம் என்றால், ரோட்டோரம் படுத்து தூங்கும் அப்பாவிகளின் கழுத்தை ஜாம்பியோ போல கடித்து எழுப்பி, அவர்களை குலைநடுங்க செய்வது போல சத்தமிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த பகுதியில் பேய் இருப்பதாக நினைத்து கொண்டு பலர் வெளியே வராமலேயே இருந்துள்ளனர். அந்த இடத்தை மட்டும் எப்படியாவது கடந்து விட வேண்டும் என்று டூவீலரில் செல்வோர், உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக கடந்துள்ளனர்.
வீடியோ
விஷயம் போலீசுக்கு சென்றது.. பேய் நடமாட்டம் உள்ளது என்ற தகவலையும் மீறி துணிந்து தைரியமாக களம் இறங்கினார்கள்.. அப்போதுதான், சம்பந்தப்பட்ட 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். "ஸாரி ஸார்.. நாங்க சும்மா ஜாலிக்காகத்தான் வீடியோ எடுத்தோம்" என்று கதறி உள்ளனர். ஆனாலும் விடுமா நம்ம போலீஸ்.. இப்படி மக்களை அச்சுறுத்த, மாறுவேடம் போட்டு ஏமாற்ற, "அனுமதி வாங்கினீர்களா? இதயம் பலவீனமானவர்கள் இறந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி கேட்டனர். மாணவர்கள் மீது இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.