கர்நாடகாவில் விவசாயிகள் ஆவேச போராட்டம்.. பெங்களூரிலும், நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பெங்களூர்: மத்திய அரசு நிறைவேற்றிய விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நடைபெறும் பாரத் பந்த் தர்ணாவின் ஒரு பகுதியாக, பெங்களூர் உட்பட, கர்நாடகா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
பெங்களூரின் மையப்பகுதியான மெஜஸ்டிக்கை அடுத்து உள்ள, மைசூர் வங்கி சதுக்கத்தில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பச்சை துண்டுகளுடன் ஒன்றுகூடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
"ஏபிஎம்சி மார்க்கெட் சட்ட திருத்தம் ஒழிக.." என்று அவர்கள் கோஷம் எழுப்பியதை பார்க்க முடிந்தது. இந்த போராட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மட்டுமல்லாது கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். ஆம் ஆத்மி கட்சியினரும் திரளாக பங்கேற்றனர். இவ்வாறு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் இருந்து மைசூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலை, தும்கூர் நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றில் கரும்பு விவசாயிகள் நூற்றுக்கணக்கில் குவிந்து போக்குவரத்தை தடை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 35 விவசாய சங்க பிரதிநிதிகள் கர்நாடகாவில் இன்றைய போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். பெங்களூரை சுற்றி உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டுமல்லாது பெங்களூர் நகருக்குள்ளும் ஆங்காங்கு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் விவசாயிகள்.
வராஹா நதிக்கரையோரம்... இளைஞர்களை ஈர்க்க ஓ.பி.எஸ். மகன் முன்னெடுக்கும் மெகா பிளான்..!
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை வேறு பாதைகளில் திருப்பி அனுப்புவதில் தீவிரம் காட்டி வருவதைப் பார்க்க முடிந்தது.
நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மிக குறைவான அளவுக்கான வேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.