சாவர்க்கருடன் சிரிக்கும் ராகுல்.. கர்நாடகாவில் கிளம்பிய பேனர் சர்ச்சை! காங். கொடுத்த விநோத விளக்கம்
பெங்களூர்: கர்நாடகாவில் ராகுல் காந்தி பேரணியில் சாவர்க்கரின் படம் இடம் பெற்று இருந்த நிலையில், அக்கட்சியினர் முக்கிய விளக்கத்தைக் கொடுத்து உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக சில ஆண்டுகளாகவே தேர்தலில் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்தச் சூழலில் காங்கிரசுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவும் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.
'நடந்தது போதும் அம்மா' காரில் வாங்க.. ராகுல் காட்டிய பாசம்.. நெகிழ்ந்த தொண்டர்கள்.. ஷூ லேஸ் வேற!
ராகுல் காந்தி
கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீரில் இந்த பாத யாத்திரை நிறைவடைகிறது. கடந்த செப். 7ஆம் தேதி குமரியில் தொடங்கியது. முதல் சில நாட்கள் தமிழ்நாட்டில் பாத யாத்திரை சென்ற ராகுல் காந்தி, அதன் பின்னர் கேரளாவில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார். அங்கு மொத்தம் 19 நாட்கள் பாத யாத்திரை சென்று அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார்.
கர்நாடகா
இதனிடையே இப்போது அவர் கர்நாடகாவில் நடைப்பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று என்பதாலும் அடுத்தாண்டு இங்குத் தேர்தல் நடைபெறுவதாலும் கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் பாத யாத்திரையை முக்கியமானதாகப் பார்க்கிறார்கள். இதற்குத் தொடக்கம் முதலே பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
சாவர்க்கர் படம்
கர்நாடகாவில் பல இடங்களில் ராகுல் காந்தியை வரவேற்று போஸ்டர்கள், பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அப்படி அங்கு ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் சாவர்க்கரின் படம் மீண்டும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மாண்டியாவில் உள்ள இந்த பேனரில் ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா படங்களுடன் சாவர்க்கர் படமும் இடம் பெற்று உள்ளது.
விளக்கம்
இந்த பேனரை வைத்து சாந்தி நகர் காங். எம்எல்ஏ நலபாட் அகமது ஹரீஸ் எனக் கூறப்பட்டது. இருப்பினும், இதை மறுத்துள்ள நலபாட் அகமது ஹரீஸ், சில அந்நிய சக்திகள் தனது பெயரைப் பயன்படுத்தி இப்படி பேனரை பேனரை வைத்து உள்ளதாகவும் இது தொடர்பாக மாண்டியா போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பேனரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்முறை இல்லை
முன்னதாக கடந்த செப். 21ஆம் தேதி கேரளாவில் பாரத் ஜோடோ யாத்ரா போஸ்டரில் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் சாவர்க்கரின் படம் இடம் பற்று இருந்தது சர்ச்சையானது. இதையடுத்து மகாத்மா காந்தியின் படம் மூலம் சாவர்க்கர் படம் மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி சாவர்க்கரை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில், மீண்டும் சாவர்க்கர் படம் பேரணியில் இடம் பெற்றுள்ளது பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
பாத யாத்திரை
கன்னியாகுமரியில் தொடங்கும் 3,570 கிமீ நீளமுள்ள இந்த பாரத் ஜோடோ யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று காஷ்மீரில் நிறைவடைகிறது. மொத்தம் 150 நாட்கள் ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் பாத யாத்திரை செல்கிறார். இப்போது வரை இந்த யாத்திரையில் ராகுல் காந்தி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் 600 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.