வேலூர் - பெங்களூர் பஸ்சில் ஹாயாக வருவது.. பைக்குகளை அபேஸ் செய்து பறப்பது.. பலே திருடர்கள் கைது
பெங்களூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு வந்து விலை உயர்ந்த மோட்டார் பைக்குகளை திருடி சென்று விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முனீர் பாஷா (20) முஹம்மது மஜீத் (25) மற்றும் மோகன் (19) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டவர்கள் என்று பெங்களூர் காவல்துறை வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
600 கோடி சொத்துக்கு அதிபதி.. பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட பெங்களூரின் 'பணக்கார' ரவுடி
வாணியம்பாடி மற்றும் ஆம்பூரைச் சேர்ந்த இவர்கள், அங்கே இருந்து பெங்களூருக்கு பஸ்ஸில் வருவது வழக்கம். பிறகு வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பைக்குகளை நோட்டமிட்டு, கள்ளச்சாவி போட்டு கிளப்பிக் கொண்டு, தங்கள் ஊர்களுக்கு ஓட்டிச் சென்று விடுவது இவர்கள் வாடிக்கை.
போலி பதிவு எண் பிளேட்டை பதித்து, வேறு நபர்களுக்கு அதை விற்பனை செய்து வந்துள்ளனர். பெங்களூர் நகரில் பைக்குகள் திருடப்படுவது அதிகரித்த நிலையில் விவிபுரம் பகுதி காவல் நிலையத்தில் இதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் தீவிர வாகன தணிக்கை முடுக்கி விடப்பட்டது.
சம்பவத்தன்று இரவு மூன்று பேர், மூன்று பைக்குகளில், சந்தேகத்திற்கிடமான வகையில் விவிபுரம் ஜங்சன் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்த வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், இந்த பைக்குகளை தடுத்து நிறுத்திய போது அவர்கள் மூவருமே நிறுத்தாமல் தப்பி ஓட முயன்றனர்.
ஆனால், போலீசார் அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் பைக் திருடர்கள் என்பது தெரியவந்தது. அவரிடம் தக்க முறையில் நடத்தப்பட்ட விசாரணையில், தப்பியோடிய மற்ற இருவர் பற்றியும் துப்பு கிடைத்தது, போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து மொத்தம் 17 பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, ரூ.20 லட்சமாகும். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு வந்து பைக்குகள், கார்கள் போன்றவற்றை திருடிச் செல்லும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.