கள்ளச்சந்தையில் விற்கப்படும் தடுப்பூசிகள்...பயன்படுத்தி வரும் வி.ஐ.பி.க்கள்...அதிர்ச்சி தகவல்கள்!
பெங்களூரு: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் முன்பே கள்ளச்சந்தையில் தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பணக்கார நோயாளிகள் சிலர் கள்ளச்சந்தையில் விற்கப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்தி வருவதாக கர்நாடகா மாநில டாக்டர்கள் சிலர் தெரிவித்து உள்ளனர்.
கள்ள சந்தையில் கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!
தடுப்பூசி போடும் பணி
உலக நாடுகளை தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. இதனால் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டன. இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் வருகிற 16-ம் தேதி முதல் போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கள்ளச்சந்தையில் விற்பனை
இந்த நிலையில் மத்திய அரசு பொதுமக்களுக்கு முறையாக தடுப்பூசி போடும் முன்பே தடுப்பூசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சில பணக்கார நோயாளிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்தி வருவதாகவும், அது தொடர்பான சந்தேகங்களை தங்களிடம் கேட்டு வருவதாகவும் அந்த மாநிலத்தில் உள்ள சில டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
நம்பகத்தன்மை இல்லை
கள்ளச்சந்தையில் சில விற்பனையாளர்கள் வழங்கும் இந்த தடுப்பூசிகள் உண்மையானவையா? அதனை போட்டு கொள்ளலாமா என சில விஐபிக்கள் தங்களிடம் போன் செய்வதாகவும், அந்த தடுப்பூசியின் மூல தயாரிப்பு, விலை, பிராண்ட் மற்றும் நம்பகத்தன்மையை அவர்களால் கண்டறிய முடியவில்லை என்றும் டாக்டர்கள் கூறினர்.
சட்டவிரோதமானது
பெங்களூரைச் சேர்ந்த மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், கள்ளசந்தையில் தடுப்பூசிகள் வாங்கிய ஒரு சிலரிடம் இருந்து எனக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்தது. தாங்கள் தடுப்பூசி போட்டதாக அல்லது சில நபர்களால் தடுப்பூசி வழங்கப்பட்டதாகக் கூறும் நபர்களைச் நான் சந்தித்தேன். தடுப்பூசி இந்தியாவில் முறைப்படி இதுவரை விற்பனைக்கு அனுமதிக்கப்படாததால் பயமாக இருக்கிறது. நாட்டில் விற்பனைக்கு அனுமதிக்கப்படாத எந்தவொரு மருந்தையும் உட்கொள்வது சட்டவிரோதமானது என்றார் அவர்.
அரசு கண்காணிக்க வேண்டும்
இது குறித்து மற்றோரு டாக்டர் கூறுகையில், கள்ள சந்தையில் கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே இதனை பெற முடியும் என்பதால் இது ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் அத்தகைய தடுப்பூசிகளை அவர்கள் எடுத்து கொள்கிறார்கள். ஆனால் தெளிவில்லாத, பயனற்ற தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.