கையை தூக்கிவிடுவார்களா.. டி.கே.சிவகுமார் வார்னிங்கை தொடர்ந்து பெங்களூரில் வெடித்த மோதல்.. பதற்றம்
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில், சுயேச்சை எம்எல்ஏக்களான எச்.நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோரை யார் சட்டசபை அழைத்துச் செல்வது என்பதில் பெரும் மோதல் வெடித்துள்ளது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் மும்பையில் இருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக திரும்பிய இரு சுயேச்சை எம்எல்ஏக்களை பாஜகவினர் பெங்களூரிலுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.அசோக்கிற்கு சொந்தமான, நிதேஷ் என்ற அப்பார்ட்மென்டில் அழைத்துக் கொண்டு வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து இன்று மாலை காங்கிரஸ் கட்சியினர் அங்கே குவிந்தனர். சிலர் குடியிருப்பு மீது கல் வீசினர். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு காங்கிரஸ்காரர்களை அகற்ற முயன்று வருகிறார்கள். இதை கேள்விப்பட்டு, பாஜக தொண்டர்களும் நூற்றுக் கணக்கானோர் அங்கே குவிந்துள்ளனர். இதனால் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் லேசான கை கலப்பும் ஏற்பட்டு, காவல்துறை தலையிட்டு விலக்கியது. பாஜக ஒழிக, திருட்டு பாஜக என்றெல்லாம், காங்கிரஸ் தொண்டர்கள் கோஷமிட்டதை பார்க்க முடிந்தது.
#WATCH Karnataka: Congress workers protest outside an apartment on Race Course road in Bengaluru alleging that independent MLAs have been lodged here. pic.twitter.com/sNyTnr6bZR
— ANI (@ANI) July 23, 2019
ஆட்சிக்கு ஆதரவு அளித்த இந்த சுயேச்சைகள், இப்போது திடீரென ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். ஆனால் அவர்களுக்கும் சேர்த்துதான் காங்கிரஸ் விப் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய அமைச்சர் டி.கே.சிவகுமார், சுயேச்சைகள் எங்கே தங்கியுள்ளார்கள் என எனக்கு தெரியும். அவர்கள் எப்படி இந்த அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் கையை தூக்கிவிடுவார்கள் என்று பார்த்துவிடுவோம் என்று எச்சரிக்கும் தொனியில் கூறினார். இதன்பிறகுதான், காங்கிரஸ் தொண்டர்கள், சுயேச்சைகள் தங்கியுள்ள குடியிருப்பை சுற்றிலும் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.