கர்நாடகா இடைத்தேர்தல்கள்: 6 தொகுதிகளில் வென்றால்தான் எடியூரப்பா ஆட்சி தப்பும்!
பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் 6 இடங்களில் வென்றால்தான் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி தப்பும் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபையில் 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் சட்டசபையின் பலம் 207 ஆக குறைந்தது.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைந்தது. கர்நாடகா சட்டசபையில் பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவுடன் சேர்த்து மொத்தம் 106 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது.
தற்போதைய 207 எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் பெரும்பான்மைக்கு தேவை 104 இடங்கள். அதனால் நூலிழை பெரும்பான்மையில் எடியூரப்பா அரசு நடைபெற்று வருகிறது.
தேன்கூட்டில் கை வைத்த எடியூரப்பா.. கோபத்தில் ரெட்டி சகோதரர்கள்.. இனிதான் இருக்கு சிக்கல்
இந்நிலையில்தான் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அக்டோபர் 21-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் கர்நாடகா சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 222 ஆக இருக்கும்.
அப்போது பெரும்பான்மைக்கு தேவை 112 எம்.எல்.ஏக்கள். அதனால் இடைத்தேர்தல்கள் நடைபெறும் 15 தொகுதிகளில் குறைந்தபட்சம் 6 இடங்களிலாவது பாஜக வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கு வரும் திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அன்றைய விசாரணையின் முடிவுகள் என்னவாக இருந்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை பாஜக மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்துமா? என்பது கேள்விக்குறிதான். அவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸும் ஜேடிஎஸ்ஸும் கங்கணம் கட்டி களமாடும்.
இது பாஜகவுக்கு மிகப் பெரும் நெருக்கடியாகவும் அமையும் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை வேட்பாளர்களாக பாஜக களமிறக்காது என்றே கூறப்படுகிறது.