கொரோனா பாதிப்பு.. பாஜகவை சேர்ந்த கர்நாடகா ராஜ்யசபா எம்பி அசோக் காஸ்டி காலமானார்
பெங்களூர்: கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த கர்நாடகா ராஜ்யசபா எம்பி அசோக் காஸ்டி இன்று காலமானார்.
கொரோனா காரணமாக வரிசையாக அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை காங்கிரஸ் எம்பி வசந்த குமார் கொரோனாவிற்கு பலியான நிலையில் பாஜகவை சேர்ந்த கர்நாடகா ராஜ்யசபா எம்பி அசோக் காஸ்டி இன்று காலமானார். பாஜகவை சேர்ந்த அசோக் காஸ்டி முதல்முறை எம்பி ஆவார். இவர் கடந்த ஜூலை 22ம் தேதிதான் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியானார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடுமையான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
முழு உடல் பரிசோதனை முடிந்தது.. எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ்!
இவருக்கு கடந்த சில நாட்களாக மூச்சு விடுவதில் கடும் சிரமம் இருந்தது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரின் உடலில் ஆக்சிஜன் அளவும் மிகவும் மோசமாக குறைந்தது. அதோடு உறுப்புகளும் செயல் இழந்தது.
இவரின் உடல்நிலை இன்று மாலை நலிவடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் இவர் காலமானார். 55 வயது நிரம்பிய இவர், கொரோனாவால் நுரையீரல் நலிவடைந்து மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக எம்பிக்கள், தலைவர்கள் பலர் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.